இலங்கை கடற்படையினரின் கண்டுபிடிப்பு - கொரோனா நோயாளியை நெருங்க சிறப்பு இயந்திரம்
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளிகளுக்கு தொலைவிலிருந்தபடி, சிகிச்சையளித்தல் மற்றும் சோதனை செய்தல் செயற்பாடுகளை, தொலை கட்டுப்பாட்டால் செயல்படும் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கக்கூடிய 'மெடிமேட்' (Medimate) எனும் மருத்துவ உபகரணத்தை இலங்கை கடற்படையினர் உருவாக்கியுள்ளனர்.
துஷார கெலும் வாதசிங்க என்பவருடைய இக்கண்டுபிடிப்பை ஆதாரமாகக் கொண்டு இலங்கை கடற்படையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பிரிவு அதனை உபகரணமாக உருவாக்கியுள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளாகும் நோயாளிகளுக்கு பயன்படுத்துவதற்காக இம்மருத்துவ உபகரணம் நேற்று நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையில் கையளிக்கப்பட்டது.
நாட்டில் பரவி வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த கடற்படையினர் தம்மாலான முயற்சிகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா, இக்கண்டுபிடிப்புக்கு உருவம் கொடுக்க விரும்பியதன் காரணமாகவே கடற்படையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவு இந்த உபகரணத்தை உருவாக்கியுள்ளது.
இந்த உபகரணம் மூலம் வைத்தியர் நோயாளிக்கு அருகில் செல்லாமல் தூரத்திலிருந்தபடியே இயக்கக்கூடிய நோயாளியுடன் தொடர்பு கொண்டு சிகிச்சையளிக்க முடியும். அத்துடன் நோயாளிக்கான மருந்து, உணவு மற்றும் பானங்களையும் இந்த உபகரணத்துக்கூடாக வழங்க முடியும். இதன் மூலம் வைத்தியர்களுக்கும் வைத்தியசாலையில் கடமையாற்றும் ஏனைய பணியாளர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் பாதுகாக்க முடியுமென்றும் கடற்படை நம்பிக்கை தெரிவித்துள்ளது.
Post a Comment