Header Ads



தேர்தலை நடத்துவதற்கான சரியான, சூழல் இன்னும் உருவாகவில்லை - மெல்கம் ரஞ்சித்

(எம்.எம்.சில்வெஸ்டர்)

பொதுத் தேர்தலை நடத்துவதற்கான சரியான சூழல் இன்னும் உருவாகவில்லை என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்தார்.

கொழும்பு பேராயர் இல்லத்தில் உயிர்த்த ஞாயிறு தின தாக்குலில் உயிரிழந்தவர்களின் ஒரு வருட நினைவுக்கான சமயக் கடமைகள் உள்ளிட்ட செயற்திட்டங்கள் குறித்து ஊடகங்களுக்கு தெளிவூட்டும் ஊடகச் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார். 

“தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு செல்கிறது. இதனை எங்களுக்கு உடனடியாக கட்டுப்படுத்த முடியாது உள்ளது. தற்போது தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 238 ஆக உயர்ந்துள்ளது. 

ஆகவே, பொதுத் தேர்தலை நடத்துவதற்கான சரியான சூழல் உருவாகவில்லை. கொரோனா வைரஸ் தொற்றை முழுமையாக கட்டுப்படுத்தியதன் பின்னர் பொதுத் தேர்தல் நடத்துவது குறித்து சிந்திக்கலாம். எமக்கு அயல் நாடான இந்தியாவில் கொரோனாவின்  தாக்கம் அதிகமாகவுள்ளது. ஆகவே, இந்நோய் தொற்றின் தாக்கம் மேலும் அதிகரிக்காத வண்ணம் நாம் கவனமாக நடந்துகொள்ள வேண்டும். 

கொரோனா வைரஸ் நோய் தொற்று முற்று முழுதாக அற்றுப்போகும் வரை அல்லது சிறந்த சூழல் உருவாகும் வரை நாம் பொறுமையாக இருக்க வேண்டும்” என்றார். 

அரசாங்கத்தின் நடவடிக்கையில் திருப்தி

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் குறித்து அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்ககைள் திருப்த்தியளிப்பதாகவும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். 

இது குறித்து அவர் கூறுகையில்,

ஜனாதிபதி, பிரதமர் , சி.ஐ.டி. யினர் , உள்ளிட்ட ஏனைய அரச தலைவர்களும்  என பலரும் சிறப்பாக தமது பொறுப்புக்களையும் கடமைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு எமது நன்றிகள். 

இந்த தாக்குதலை மேற்கொண்டவர்களை விடவும் இந்த தாக்குதலை நடத்த திட்டமிடப்பட்டவர்களே கடுமையான குற்றவாளிகள். தாக்குதல் நடத்த திட்டமிட்டவர்களுக்கு உதவி புரிந்தவர்கள், வாகனங்களில் அவர்களை கொண்டு சென்றவர்கள், தகவல்கள் தெரிந்தும் மறைத்தவர்கள் என ஒவ்வொருவரும் தண்டிக்கப்பட வேண்டும். இதில் தகுதி, தராதரம் பாராது அனைவரும் நாட்டு சட்டத்தின்படி தண்டிக்கப்பட வேண்டும்.

இதை மதம் சார்ந்த விடயமாக பார்க்க வேண்டாம் என தயவுடன் கேட்டுக்கொண்ட கர்தினால், குறித்த ஓர் மதத்தைச் சார்ந்தவர்களால் மேற்கொள்ளப்பட்ட குற்றத்தை ஒட்டு மொத்த மதத்தினர் மீதும் திணிக்க வேண்டாம் என மிகவும் அவசியமாக கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

No comments

Powered by Blogger.