முஸ்லிம் என்று சொல்லு - மனிதாபிமானத்தில் முந்து - உண்மைச் சம்பவம்
தன்னுடைய மகளின் பிரசவத்திற்காக கடந்த பிப்ரவரி மாதம் கொல்கத்தாவில் இருந்து மனைவியுடன் பெங்களுருவிற்கு வருகிறார் கார்த்திக் மைத்தி (வயது 63). இவருடைய மருமகன் பிண்டு தாஸ் ஒரு நிறுவனத்தில் செக்யூரிட்டியாக பணி புரிகிறார். சில தினங்களுக்கு முன்பு தூக்கத்திலேயே கார்த்திக்கின் உயிர் பிரிகிறது. பிண்டு தாஸ் அக்கம் பக்கத்தினரின் உதவியை நாடுகிறார். கொரோனாவால் இறந்திருக்கலாம் என்று சந்தேகம் தெரிவித்து உதவிக்கு வர மறுக்கின்றனர் அண்டை வீட்டினர்.
செய்வதறியாமல் தவித்த பிண்டு தாஸ்சிற்கு, இரு தினங்களுக்கு முன்பாக தங்கள் பகுதியில் மளிகை பொருட்களை (தன் தொண்டு நிறுவனம் மூலமாக) வழங்கிய சலீம் பாட்ஷா நினைவுக்கு வரவும், அவரை அழைக்கிறார். தன் நண்பர்களுடன் விரைந்து வந்த சலீம், இறுதி சடங்கிற்கான பணிகளை முடிக்கிறார். மேலும், கார்த்திக்கின் மனைவி மற்றும் மகளை ஆறுதல் படுத்துவதற்காக தங்கள் வீட்டு பெண்களை வரச் செய்கிறார்கள். உணவு தேவைகளையும் அப்பெண்கள் பூர்த்தி செய்கிறார்கள்.
மயானம் வரை உடலை சுமந்து சென்று இறுதிக் காரியங்களை முடிக்கின்றனர். உள்ளூர் கன்னட செய்தி நிறுவனத்திற்கு வேலை செய்த ஒருவர் மூலமாக இவையெல்லாம் ஆவணப்படுத்தப்பட்டு செய்தி வைரலாகிறது. டைம்ஸ் ஆப் இந்தியா குழுமத்தின் 'பெங்களூர் மிரர்' இதழ், "முஸ்லிம் சகோதரத்துவம்" என்ற தலைப்பில் முதல் பக்கத்தில் இதனை வெளியிடுகிறது. சலீம் மற்றும் அவரது நண்பர்கள் தேவதைகளாக வந்தனர் என்று குறிப்பிடும் பிண்டு தாஸ், ஒரு இறப்பானது பரிவுடன் பார்க்கப்படாமல் பயத்துடன் பார்க்கப்படும் என்பதை தான் நினைத்துக்கூட பார்க்கவில்லை என்கிறார்.
கொரோனா பாதிப்பிற்கு பிறகு இப்படியான செய்திகள் வருவது இது ஆறாவது முறையாகும்.
Post a Comment