Header Ads



கொரோனா ஜனாஸா நாம், செய்ய வேண்டியது என்ன...?


- Dr. Liya uddeen -

இரு ஈமானிய உடல்கள் எரிந்த போது, எமது இதயங்களும், கூடவே எதிர்பார்ப்புகளும்  கருகிச் சாம்பலாகின...

இரண்டு சந்தர்ப்பங்களின் போதும், ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்பதற்காக, சகல அரசியல், ஆன்மீக, சிவில் சமூகத்தலைமைகளும் ஒன்று சேர்ந்து  பலத்த முயற்சியொன்றை மேற்கொண்டனர், எனினும்  இறை நியதி வேறு விதமாக அமைந்திருந்தது.

Health Ministry இனால் கடைசியாக வெளியிடப்பட்டுள்ள circular இன் படி எரியூட்டப்பட மட்டுமே வாய்ப்புள்ளது. 

இனி, 
இவ்வாறான இக்கட்டான நிலமைகளில் வழமை போன்று ACJU ஆனது அதனது சக்திக்கும் அப்பாற்பட்டு  பல பிரச்சனைகளுக்கு மத்தியில் அதனது சேவையைத் தொடர்வதாக  அறிகிறோம். இது பற்றி ஆராய விஷேட நிபுணர்களின் குழுவொன்றை ஏற்பாடு செய்திருப்பது வரவேற்கத்தக்கது.

அத்துடன் GMOA - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கமும் மேற்படி முடிவை மீள் பரிசீலனை செய்யுமாறு DGHS ஐ வேண்டியுள்ளது. 

இந்த நிலையில் எங்களால்  முடியுமான  சகல முயற்சிகளையும் மேற்கொண்டிருக்கிறோம்.  தொடர்ந்தும் துஆச் செய்து கொள்வோம். நல்லதொரு முடிவு கிடைக்க இறைவனே போதுமானவன்.

அவர்கள் (பல அழுத்தங்கள் காரணமாக)
எம்மீது எதனையும்  திணிக்க முற்படலாம்,

ஆனால் ...

"எந்த ஒரு ஆன்மா மீதும், சுமக்க  முடியாததொன்றை இறைவன் விதியாக்க மாட்டான்". 

மறந்து விடாதீர்கள்,

நிச்சயமாக
தூங்குபவர் போல் நடிப்பவர்களைத் தட்டி எழுப்பும் நாளொன்று வரலாம்...

ஏனெனில்

தற்போதைய சூழ்நிலையில் நாளொன்றுக்கு ஓரிரண்டு மரணங்கள் சம்பவிப்பதால் அவற்றை எரித்தாலும் , எதிர் காலத்தில் மரணங்களின் எண்ணிக்கை கூடுமாயின் ( அவ்வாறு நடக்காமலிருக்க வேண்டும்) எரிப்பது சாத்தியமற்றுப் போக  அடக்கம் செய்ய அவர்களாலேயே அனுமதி தரப்படலாம்.

வாழ்வும், மரணமும் இறை நியதி என்பது எமது அசைக்க முடியா நம்பிக்கை, ஆனால் பெரும்பான்மையினரை பொருத்தமட்டில் "கொரொனா மரணம் ' மிகவும் Sensitive ஆன விசயம்.

இதனாலோ என்னவோ,  கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கெதிராக அநீதிகள் இழைக்கப்பட்ட போது எமக்காகக் குரல் கொடுத்த   பெரும்பான்மைச் சமூகத்தின் பல  புத்தி ஜீவிகளை களத்தில் காண முடியவில்லை. 

மதங்களைத் தாண்டிய மனித நேயத்திற்காக ஒன்று படுவோம் என பலரும் அறை கூவல் விடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

எனவே, எமது செயற்பாடுகளால் அல்லாஹ்வைத் திருப்திப் படுத்துவோம். நீதிக்காக (நமக்காக) குரல் கொடுக்கும் நடுநிலையான பெரும்பான்மை சகோதரர்களை நம்மை விட்டு மேலும்  தூரமாக்கமலிருக்க வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருப்போம். அவர்களின் உணர்வுகளைப் புரிந்து மதித்து செயற்படுவோம். 

குறிப்பாக  எமது செயற்பாடுகள் எதுவாயினும் அது அவர்களைக் கொந்தளிக்கச் செய்யாமலிருக்க வேண்டும்.
எவ்வாறாயினும், தேவையேற்படின்  உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கின்ற சர்வதேச அமைப்பு களின் உதவியை,  இறுதியாக நாடலாம்.

ஜனாஸா விவகாரத்தில் நாம் கடுமையாக , விடாப்பிடியாக நடப்போமேயானால் அது அவர்களிடத்தில் இஸ்லாம் பற்றிய தவறான புரிதல்களைக் கூட  ஏற்படுத்தலாம், அத்துடன் இனவாத ஊடகங்களுக்கு பேசு பொருளாக மாறலாம், பிணத்தை வைத்து அரசியல் செய்யவிருப்போருக்கும்  நல்லதொரு  வாய்ப்பாக மாறலாம். 

முஸ்லிம் சிறுபான்மையினராக வாழும் Europe நாடுகளோடு எமக்கு வழங்கப்பட்டிருக்கும் உரிமைகளை ஒப்பிட்டு பார்க்க முடியாது. அங்குள்ள நிலமை வேறு இங்குள்ள நிலமை வேறு.

இறுதியாக...., 

இஸ்லாம் ஒரு பூரண வாழ்க்கைத் திட்டம், நெகிழ்வான மார்க்கம், இறுதி நாள் வரையான எல்லாப் பிரச்சனைகளுக்கும் சிறந்த  தீர்வுகளை வழங்கும் மார்க்கம், நெருக்கடியான, நிர்ப்பந்தமான சந்தர்ப்பங்களில் எதிர் நோக்கும் பிரச்சனைகளுக்கு அது சிறந்த தீர்வுகளை வழங்குகிறது .

எனவே, ஜனாஸா நல்லடக்கம் தொடர்பாக எந்த முடிவு அரசிடமிருந்து கிடைக்கப் பெறினும் மௌனம் காப்போம். 

இது ஒரு விதிவிலக்கான, நிர்ப்பந்த சூழ்நிலையாகும். எனவே அரசின் முடிவினையும் அறிவுறுத்தல்களையும் ஏற்று நடப்பதே இஸ்லாத்தின் வழிகாட்டுதலுமாகும்.

தாம் வாழும் பூமியை நேசி - நபி மொழி.

2 comments:

  1. அனைத்துக்கும் அல்லாஹ் போதுமானவன்!
    ஆரம்ப கால இஸ்லாமிய வரலாற்றில் புனிதப் போரில் மரணித்தவர்களது உடல்கள் குளிப்பாட்டாமல் நல்லடக்கம் செய்யப்பட்ட சந்தர்ப்பங்கள் பற்றிய
    பதிவுகள் உள்ளன.
    அந்த வகையில் ஒரு ஜனாசாவுக்கான ஒரு கடமை விடப்பட்டு ஏனைய மூன்று கடமைகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன.(இச்சந்தர்ப்பத்தில் மலக்குகள் குளிப்பாட்டிய பதிவும் உண்டு) இறுதியில் இவர்கள் சொர்க்க வாசிகள் என்று நபிகளாரினால்( ஸல்) நன்மாராயமும் கூறப்பட்டுள்ளது.
    ஒரு இக்கட்டான சூழலில் நாட்டினது சட்டம்,எமது சமூகத்தின் எதிர்கால இருப்பு,கண்ணியம் என்பவற்றின் அடிப்படையில் உடலை எரிப்பது அங்கீகரிக்கப்பட்டதா? என்பதை எமது அ.இ.ஜ.உலமா சபை ஆராய்ந்து முடிவினை வெளியிட வேண்டும்.அல்லது சர்வதேச இஸ்லாமிய அறிஞர்களது பத்வாவை பெற்று சமூகத்தை வழிநடத்தும் பொறுப்பை ஏற்க வேண்டும்.
    அதற்கும் மேலாக எம்மால் எதுவும் செய்ய முடியாத நிலைஏற்படுமாயின், நாம் ஹிஜ்றத் செய்ய வேண்டும். இதுவும் இன்றைய சர்வதேச சட்டங்களின் படி சாத்தியமானதல்ல. எனவே நம் போன்றவர்கள் தேவையற்ற முறையில் விமர்சனம் செய்யாமலும் அரசியல் வாதிகளை வம்புக்கு இழுக்காமலும் இறைவனிடத்தில் பாரம்சாட்டுவோம்.
    இனவாதிகளை அல்லாஹ் பார்த்துக் கொள்ள போதுமானவன்.
    வமகறு வமகறள்ளாஹ்ஹு வள்ளாஹு ஹைறுள் மாகிறீன் ( திருக்குர்ஆன் ஆலுஇம்றான் அத்தியாயம் 54 வது வசனம்)
    அவர்களும் சூழ்ச்சி செய்தார்கள் அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்தான். அல்லாஹ் அவன் சூழ்ச்சி செய்வதில் மிகைத்தவனாவான்.

    ReplyDelete
  2. அன்ன அப்போ யாரும் பௌத்த மதத்தை தவிர வேறு மதங்களை பின்பற்றுவதை இந்த பௌத்த வாத அரசு தடைசெய்து சட்டமாக்கினால், அதையும் பின்பற்றுவது நபி வழியோ ?
    WHO இன் அறிவுறுத்தலை கண்டுகொள்ளாமல் வேண்டுமென்றே இனவாத அழுத்தத்தை பிறப்பிப்பதை யாரும் கண்டுகொள்ளவில்லை, ஏன் பயம் (எது முஃமின்களின் அடையாளமில்லை )
    " உங்களுடைய உடைமைகளும் உரிமைகளும் பறிக்கப்படும்போது அதேட்க்கெதிராக போராடுவது உங்கள் மீது கட்டாய கடமை " இவ்வாறு அல்லாஹ் கூறுகிறானே! ( இங்கு போராடுவதுயான்பது ஆயுத போரட்டம் மட்டுமில்லை).

    ReplyDelete

Powered by Blogger.