Header Ads



ஊரடங்கில் சுவாரசிய சம்பவம் - பொருள் வாங்கசென்று, மருமகளை அழைத்துவந்த மகன் - அதிர்ச்சியான தாய்

ஊரடங்கு காரணமாக வீட்டிற்கு தேவையான மளிகைப்பொருட்களை வாங்க வெளியே சென்ற தனது மகன் மருமகளை அழைத்து வந்ததால் அவரது தாயார் அதிர்ச்சியடைந்தார்.

இந்நிலையில், இந்த ஊரடங்கு காலத்திலும் பல்வேறு பகுதிகளில் சுவாரசியமான சம்பவங்களும் அரங்கேறித்தான் வருகிறது. அது போன்று சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடைபெற்றுள்ளது. 

ஊரடங்கு காரணமாக வீட்டிற்கு தேவையான மளிகைப்பொருட்களை வாங்க சென்ற மகன் மருமகளை அழைத்து வந்ததால் தாய் அதிர்ச்சி அடைந்தார்.

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் ஹூடு (26). இவர் சுவேதா என்ற பெண்ணை இரண்டு மாதங்களுக்கு முன்னர் யாருக்கும் தெரியாமல் கோவிலில் வைத்து திருமணம் செய்துகொண்டார். 

ஆனால், கொரோனா காரணமாக கோவிலில் இருவரும் செய்துகொண்ட திருமணத்திற்கான சான்றிதழை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. 

இதனால் தனது மனைவி சுவேதாவை அண்டை மாநிலமான டெல்லியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு அவரை தங்கவைத்தார்.

மேலும், இருவரும் திருமணம் செய்ததன் ஆதாரமாக விளங்கும் சான்றிதழை பெற ஹூடு மீண்டும் முயற்சி செய்தார். ஆனால் ஊரடங்கு காரணமாக அனைத்து அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளதால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. 

இதற்கிடையில், டெல்லியில் சுவேதா தங்கி இருந்த வீட்டின் உரிமையாளர் திடீரென அவரை வீட்டை காலி செய்யும்படி வற்புறுத்தினார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் தனது கணவர் ஹூடுவிடம் நிலைமையை எடுத்துரைத்தார். 

இந்நிலையில், காசியாபாத்தில் வீட்டில் இருந்த ஹூடுவை அவரது தாயார் நேற்று மளிகைப்பொருட்களை வாங்கி வரும்படி கடைக்கு அனுப்பி வைத்தார். 

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய ஹூடு நேரடியாக தனது மனைவி சுவேதா தங்கியிருந்த வீட்டிற்கு சென்று அவரை அங்கிருந்து காசியாபாத்தில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து வந்தார். 

மளிகை பொருட்களை வாங்கச்சென்ற தனது மகன் இளம் பெண் ஒருவரை வீட்டிற்கு அழைத்துவந்து இவர்தான் உங்கள் மருமகள் என கூறியதால் அதிர்ச்சியடைந்த ஹூடுவின் தாயார் இருவரையும் வீட்டின் வாசலிலேயே நிற்கவைத்தார். 

மேலும், தனக்கு தெரியாமல் மகன் திருமணம் செய்துகொண்டதாலும், மளிகைக்கடைக்கு செல்வதாக கூறிவிட்டு மருமகளை அழைத்து வந்ததாலும் இந்த திருமணத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்தார். 

இதனால் தனது மகனையும், அவனது மனைவியையும் வீட்டிற்குள் அனுமதிக்க முடியாது என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த ஷகீபாபாத் பகுதி போலீசார் மகன் ஹூடுவையும், மருமகள் சுவேதாவை வீட்டிற்குள் செல்ல அனுமதிக்கும்படி அந்த பெண்ணிடம் கோரிக்கை விடுத்தனர். 

ஆனால் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாததால் ஊரடங்கு முடியும் வரை தம்பதிகள் இருவரும் டெல்லியில் உள்ள வாடகை வீட்டிலேயே இருக்கும் படி அறிவுறுத்தி பிரச்சனையை தற்காலிகமாக தீர்த்துவைத்துள்ளனர். 

ஊரடங்கு காலத்தில் மளிகை பொருட்கள் வாங்கச்சென்ற மகன் மருமகளை அழைத்துவந்ததால் தாய்க்கு மட்டுமல்ல அப்பகுதியை சேர்ந்த பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments

Powered by Blogger.