Header Ads



கொரோனாவும், இலங்கைச் சமூகமும்

- கலாநிதி அமீர் அலி, மேர்டொக் பல்கலைக்கழகம் மேற்கு அவுஸ்திரேலியா -

கொரோனா நுண்கிருமியினால் உலகப் போரொன்றே ஆரம்பமாகிவிட்டதெனலாம். அனைத்து நாடுகளுமே இப்போரில் ஈடுபட்டுள்ளன. ஒரு நுண்;கிருமியினால் தோற்றுவிக்கப்பட்ட இப்போர் யாரால் எவ்வாறு எங்கே ஆரம்பிக்கப்பட்டது? அது எவ்வாறு உலகளாவிய ரீதியில் பரவியது? அதன் சீரழிவைத் தடுக்கும் ஆற்றலையும் சக்தியையும் மனித சமுதாயம்; இழந்துவிட்டதா? என்பனபோன்ற கேள்விகளுக்கு காலம்தான் பதில் சொல்லவேண்டும்.

தொற்று நோய்களைப்பற்றிய ஒரு முக்கியமான உண்மையை பேராசிரியர் பிராங்க் சுநோடன் அவரது கொள்ளைநோய்களும் சமூகங்களும் என்ற அற்புதான ஆய்வு நூலின் முன்னுரையில் பின்வருமாறு கூறுகிறார்: 'கொள்ளைநோய்கள் தொடர்பின்றிச் சடுதியாகத் தோன்றிச் சமூகங்களைத் தாக்குவனவல்ல. மாறாக, ஒவ்வொரு சமூகமும் தனக்கெனப் பிரத்தியேகமான பலஹீனங்களை (எரடநெசயடிடைவைநைள) உருவாக்கிக் கொள்கின்றன. அவற்றை ஆராய்ந்தால் அச்சமூகத்தின் அமைப்பு, அதன் வாழ்க்கைத்தரம், அதன் அரசியல் முந்துரிமைகள் (pசழைசவைநைள) போன்றவற்றை விளங்கிக் கொள்ளலாம்'. இந்தப் பலஹீனங்களே கொள்ளைநோய் தாக்கத்தின் அகலத்தையும் ஆழத்தையும் மட்டுமல்லாமல்  அந்நோய் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதையும் தீர்மானிக்கும். இவ்வாறு அவர் கூறும்போது மருத்துவ விஞ்ஞான ஆராய்ச்சியினையும் அதன் கண்டுபிடிப்புகளையும் எள்ளளவேனும் குறைத்து எடைபோடவில்லை.  

ஆகவே இலங்கையின் பல்லினச் சமூக அமைப்பு, நாட்டுமக்களின் வாழ்க்கைத்தர வேறுபாடுகள், நாட்டின் அரசியலின் முந்துரிமைகள், ஆதியன இக்கொரோனா நோய் தாக்கத்தின் ஆழ அகலங்களையும் அதலிருந்து எவ்வளவு கெதியில் விடுதலை பெறலாம் என்பதையும் நிர்ணயிக்கும். எடுத்துக்காட்டாக, சகல இனங்களும் ஒரே படியில் வைத்துக் கணிக்கப்படுகின்றனவா அல்லது பாரபட்சமாகக் கணிக்கப்படுகின்றனவா என்பது முக்கியம். கொள்ளை நோய்களுக்கு நிறபேதமோ இனபேதமோ வர்க்கபேதமோ தெரியாது. அவ்வாறான நோய்களின்முன் யாவரும் சமமே. ஆனால் அந்த நோயை ஒழிக்க நினைப்பவர்கள் அவர்களின் நடவடிக்கைகளை பாரபட்சத்துடன் மேற்கொள்வார்களாயின் நிச்சயம் நோயின் ஆயுட்காலம் நீடிப்பது நிச்சயம்.  அதேபோன்று அரசியல்வாதிகளும்  கொள்ளைநோயை தமக்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதமென நினைத்துத் தமது அரசியல் அதிகாரத்தைப் பாதுகாக்கும் நோக்குடன் அந்நோயொழிப்பு முயற்சியை நாடுவார்களாயின் அதுவும் நோயின் ஆட்சியை நீட்டும். சாதி, இன, மத, வர்க்க வேறுபாடுகளைத் தாண்டி மானிடம் என்ற ஒரே போர்வையின்கீழ் நின்று தார்மீக மனப்பான்மையுடன் கொரோனா ஒழிப்பை நாடினால் விரைவில் சமூகம் நோயிலிருந்து விடுதலையடையும். 

இந்தப் பின்னணியில் நின்று இலங்கையின் கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளை நோக்குகையில் இரண்டு விடயங்கள் கவலையளிக்கின்றன. முதலாவது, நாட்டின் ஜனாதிபதியின் சில நடவடிக்கைகள் கொரோனாவை தனக்குக் கிடைத்த இன்னுமொரு அரிய வாய்ப்பு எனக்கருதி அதன்மூலம் தனது அரசியல் பலத்தை நிலைநாட்டவும் அவரின் அரசியல் ஆயுளை நீட்டவும் முற்படுவதாகத் தெரிகின்றது. சென்ற வருடம் உயிர்த்த ஞாயிறன்று ஒரு பயங்கரவாதக் கும்பல் நடத்திய உயிர்க்கொலைத் தாண்டவம் கோத்தாபய ராஜபக்ஸ ஜனாதிபதியாவதற்குக் கிடைத்த முதலாவது வரப்பிரசாதம். விடுதலைப்புலிகளைத் தோற்கடித்த நான் இப்பயங்கரவாதிகளையும் பூண்டோடு ஒழித்து நாட்டின் பாதுகாப்பையும் இறமையையும் நிலைநாட்டுவேன் என்று முரசறை கொட்டித்தானே அவர் தேர்தலிற் குதித்தார். அதற்காக நாட்டின் இரு சிறுபான்மை இனங்களையும் எதிரிகளாகச் சித்தரித்துத்தானே பௌத்த பேராதிக்கவாதிகள் சிங்கள பௌத்த மக்களின் வாக்குகளை அவருக்காகக் திரட்டி வெற்றியீட்டினர்;. ஆனாலும் அந்த வெற்றி தனது ஆட்சியதிகாரப் பாதையின் முதற்படியேயன்றி உச்சப்படியல்ல என்பதை அவரும் அவரின் ஆதரவாளர்களும் நன்கறிவர். இலங்கையின் தற்போதைய அரசியல் யாப்பு அதன் பத்தொன்பதாவது திருத்தத்துடன் அமுலில் இருக்கும்வரை பௌத்த பேராதிக்கம் நிலைபெற முடியாதென்பது வெள்ளிடைமலை. ஆகவே அந்த யாப்பு ஒன்றில் கிழித்தெறியப்பட்டுப் புது யாப்பு வரையப்படல் வேண்டும், அல்லது பத்தொன்பதாம் திருத்தமாவது நீக்கப்படல் வேண்டும். அதனை நாடாளுமன்றத்தில் முன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவில்லாமல் நிறைவேற்ற முடியாது. எனவேதான் தனது தமையனின் தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணி எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் வெற்றியடைவதற்காக ஜனாதிபதி அரும்பாடு படுகின்றார். அந்த முயற்சியில் ஜனாதிபதிக்குக் கிடைத்த இரண்டாவது வரப்பிரசாதமே கொரோனா கொள்ளைநோய்.  

இந்தக் கொள்ளைநோயை முதலில் ஒழிக்கவேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. மற்ற நாடுகளில் நடைபெறுவதுபோல் இலங்கையிலும்; மக்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக ஜனாதிபதியின் கட்டளையின்கீழ் ஊரடங்குச் சட்டத்தை அமுலாக்கியமையை யாரும் குறைகூற முடியாது. நாடே இன்று மரணவீடுபோல் காட்சியளித்தாலும் நோயொழிப்புக்காக மக்கள் அந்த நிலையைத் தழுவியே ஆகவேண்டும். ஆனால் இவ்வாறான ஒரு சூழலில் அரசாங்கத்தைக் கலைத்துவிட்டு முழு அதிகாரத்தையும் ஜனாதிபதியே கையேற்று மக்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் அவரே முன்னின்று செய்வதும் அதற்கு ஆதரவாக காப்பந்துப் பிரதமரும் அவரின் மந்திரிகளும் இயங்குவதும் மக்களின் மனதில் தன்னையும் தனக்கு ஆதரவான தமையனின் கட்சியையும் மட்டுமே நிலைகொள்ளச் செய்யும் ஓர் அரசியல் தந்திரம் என்று கருதுவதில் ஏதேனும் தவறுண்டா? கோத்தாபய தன்னலம் கருதாத ஒரு தலைவரென்றால் பாராளுமன்றத்ததை உடனடியாகக் கூட்டவேண்டும். தற்போது உருவாகியிருக்கும் பாரதூரமான பொருளாதார நெருக்கடிக்கும் மக்களின் உடல்நல நெருக்கடிக்கும் பாராளுமன்றத்தின் ஆலோசனையுடனேயே நடவடிக்கைகள் எடுக்கப்படல் வேண்டும். அடுத்த தேர்தல் எப்போது நடைபெறும் என்பதையும் பாராளுமன்றமே முடிவு செய்ய வேண்டும்.  

இந்த நோய் குறைந்தது அடுத்த ஆறு மாதங்களுக்காவது நீடிக்குமென மருத்துவ வல்லுனர்கள் கருதுகின்றனர். இலங்கை இதற்கு விதிவிலக்காக இருக்கமுடியாது. இந்த நீடிப்பால் ஏற்படவிருக்கும் பொருளாதார நட்டங்களோ அனந்தம். ஏற்கனவே கடன்பழுவினால் நசுங்கும் இலங்கையின் பொருளாதாரமும் அதனால் அவதியுறும் மக்கனுளும் மீண்டும் தலைநிமிர்வதற்குப் பல வருடங்களாவது செல்லும். எனினும் அனைத்து மக்களும் ஒன்றுபட்டு பல தியாகங்களுக்கு மத்தியிலும் அயராது முயற்சி செய்தால் அந்தக்கால இடைவேளையைச் சுருக்கலாம். இங்கேதான் இலங்கையின் பல்லினச் சமூக அமைப்பை எவ்வாறு ஆட்சியாளர்கள் பேணுகின்றனர் என்பது அவசியமாகின்றது. இதனாலேதான் பேராசிரியர் சுநோடன் கொள்ளைநேயை சமூக அமைப்புடன் தொடர்புறுத்துகிறார். 
இது தொடர்பாக ஜனாதிபதியின் இன்னுமொரு செயலையும் கண்டிக்கவேண்டியுள்ளது. நாடே கொள்ளைநோயின் பிடியிற் சிக்குண்டு துயரத்தில் ஆழ்ந்துள்ள ஒரு சூழலில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒரு கொலைகாரச் சிப்பாயை மன்னித்து விடுதலை செய்தமையை மனிதாபிமானமுள்ள எவருமே வரவேற்க முடியாது. ஜனாதிபதியின் கர்வமான இச்செயல் நாட்டின் நீதித்துறைச் சுதந்திரத்துக்கு விழுந்த இன்னுமோர் இடியென்பது ஒரு புறமிருக்க, அது தமிழினத்துக்கு இழைக்கப்பட்ட மேலுமோர் இழிவும் தண்டனையும் என்பதையும் மறுக்கமுடியாது. அப்பாவித் தமிழ் மக்களை, சிறுவர்களுட்பட, வெட்டிக்கொன்ற இப்பாதகனை மன்னித்து விடுதலையாக்கி வீதியிலே நடமாடவிட்டமை ஜனாதிபதியின் அரசியல் இலாபம் கருதியா? அல்லது அவனைக் கொண்டு வேறுசில அட்டூழியங்களைச் செய்யவேண்டியுள்ளது என்பதாலா? அல்லது தமிழினத்தையே ஜனாதிபதி துச்சமென மதிப்பதாலா? ஏல்லாமே ஒரு புரியாத புதிராகத் தோன்றுகிறது. தமிழினத்தின் உள்ளங்களில் ஆறிக்கொண்டிருந்த ஒரு புண்ணை ஜனாதிபதி மீண்டும் கீறிவிட்டுள்ளார். நாட்டின் பல்லின அமைதிக்கும் ஒற்றுமைக்கும் பெரும்பான்மை இனம் அடுக்கடுக்காக இழைத்துவரும் இன்னல்கள் ஏராளம். ஜனாதிபதியின் இச்செயல் அவற்றிற்குச் சிகரமாய் அமைந்துள்ளதென்றால் அது மிகையாகாது. எனவே, எல்லா இனங்களையும் சமமாகக் கணிக்காமல் தனது நோயொழிப்பு நடவடிக்கைகளுக்கு உதவுமாறு கேட்பது அவர் கேட்பதை எவ்வாறு சரிகாணலாம்?  

இலங்கையின் பல்லினச் சமூக அமைப்பு பல கலாச்சாரங்களைக் கொண்டது. அந்தக் கலாச்சாரப்பன்மை எவ்வாறு உதாசீனப்படுத்தப்படுகின்றது என்பதற்கு சிறந்ததோர்  உதாரணம் கொரோனாவினால் உயிரிழந்த ஒரு முஸ்லிம் ஆணுடலைத் தகனம் செய்தமை. முஸ்லிம்கள் பூதவுடலைத் தகனம் செய்வதில்லை, மண்ணுக்குள் புதைப்பார்கள். ஆனால் அதற்கு முன்னர் அவ்வுடலைக் கழுவி அதற்காகப் பிரார்த்தித்து அதன்பின்னரே அடக்கம் செய்வர். தற்போதுள்ள தொற்றுநோய் பாதுகாப்புச் சூழலில் அக்கிரியைகள் எல்லாவற்றையும் செய்ய முடியாமல் போனாலும் ஆழமான புதைகுழிக்குள் பிராhத்தனையுடன் ஓரிரு உறவினரின் பார்வையில் அடக்கம் செய்வதால் சமூகம் கலாச்சார வேறுபாடுகளுக்கு மதிப்பளிக்கின்றதை உணர்த்தும். உதாரணத்துக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் மரணச் சடங்குகளில் பங்குபற்ற பத்துப் பேருக்கு இடமளித்துள்ளது. கொரோனாவினால் உயிரிழக்கும் முஸ்லிம்களை தொழுகைக்காகப் பள்ளிவாசலுக்குக் கொண்டுவராமல் நேரே மையவாடிக்குக் கொண்டுசென்று அங்கே பதின்மருடன் தொழுகை நடாத்தி அடக்கம் செய்ய அரசு அனுமதித்துள்ளது. எந்த அளவுக்கு அவுஸ்திரேலிய அரசு பல கட்டுப்பாடுகளின் மத்தியிலும் இனங்களின் மத கலாச்சாரப் பண்புகளுக்கு மதிப்பளிக்கின்றதென்பதை இவ்வுதாரணம் எடுத்தக்காட்டவில்லையா? இதனாலேதான் கொரோனாவுக்கெதிரான போரில் அவுஸ்திரேலிய முஸ்லிம் சமூகமும் தனது பூரண ஒத்துழைப்பை அரசுக்கு வழங்குகின்றது. இது அவுஸ்திரேலியாவின் பலம், ஆனால் இலங்கையின் பலஹீனம்.    
               
கொள்ளைநோயும் இயற்கையின் மற்றைய அனர்த்தனங்களைப்போன்று அவை நீடிக்கும் காலங்களில் மானிடர்களின் குணாதிசயங்களை உடனடியாக வெளிப்படுத்திவிடும். உதாரணமாக. அப்படிப்பட்ட காலங்களில் பொருள் தட்டுப்பாடு ஏற்படுவது இயல்பு. அவ்வாறு தட்டுப்டபாடான பொருள்களை விற்பவர்களும் வாங்குபவர்களும் எவ்வாறு நடந்துகொள்கிறார்கள் என்பதிலிருந்து அவர்களின் குணாதிசயங்களை அறிந்துகொள்ளலாம். சுயநலனையே முன்வைத்துச் செற்படுவோரையும் பிறர்நலனுக்காகத் தம்நலதை; தியாகம் செய்வோரையும் இச்சமயங்களிற் காணலாம். ஒரு சமூகத்தில் முதலாவது வர்க்கம் பெருகினால் கொள்ளைநோயின் ஆயுள் நீடிக்கும், இரண்டாவது வர்க்கம் பெருகின் அதன் ஆயுள் குறையும். எந்த வர்க்கம் வளர்கின்றதென்பதை அச்சமூகத்தின் கல்வி நிலை, அதன் தலைமைத்துவம், தத்துவம், கலாசாரப் பண்பாடுகள், மக்களின் வாழ்க்கைத்தரம், அவர்களின் பழக்கவழக்கங்கள் ஆதியன நிர்ணயிக்கும்.   

முடிவாக, ஒரு கொள்ளைநோய் பரவுவதையும் அதன் கொடூரங்களையும் தடுப்பூசி மருந்துகளாலும் வைத்தியர்களாலும் மட்டுமே கட்டுப்படுத்த முடியாது. அவை இன்றியமையாத தேவைகள் என்பதை மறுக்கவில்லை. ஆனால், சுநோடன் கூறுவதுபோன்று ஒரு சமூகத்தின் தனிப்பட்ட பலஹீனங்கள் அந்த நோயின் நுழைவையும், பரவலையும், தாக்கத்தையும் தடுக்கலாம், நீட்டலாம்,  கட்டுப்படுத்தலாம், ஏன் முற்றாக ஒழித்தும் விடலாம். இந்த விடயங்களில் இலங்கைச் சமூகம் கற்கவேண்டிய பாடங்கள் இன்னும் எத்தனையோ உண்டு.       

3 comments:

  1. Well explain article all society must come forward and people must unite regardless of the cast to eradicate this Covid 19.

    ReplyDelete
  2. Excellent article. It is fact. But....?

    ReplyDelete

Powered by Blogger.