Header Ads



6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை: புத்தளத்தில் 245 வீடுகள் சேதம்

(எம்.மனோசித்ரா)

நாட்டில் நாளைய தினம் பெரும்பாலான பிரதேசங்களில் கடும் மழையுடனான காலநிலை நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

அத்தோடு 6 மாகாணங்களில் 100 மில்லி மீற்றரை விட அதிக மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் என்பதோடு, 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு நாடளாவிய ரீதியில் பல பிரதேசங்களில் இன்று புதன்கிழமை பிற்பகல் நிலவிய கடும் மழையுடனான காலநிலையால் புத்தளம் மாவட்டம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை சுமார் 4.30 மணியளவில் புத்தளத்தில் வீசிய கடும் காற்றினால் 245 வீடுகள் சேதமடைந்துள்ளன.

கருவலகெஸ்வௌ பிரதேசத்தில் 110 வீடுகளும், நவகத்தேகமவில் 60 வீடுகளும், ஆனைமடுவில் 53 வீடுகளும், வனாத்தவில்லு பிரதேசத்தில் 15 வீடுகளும், புத்தளத்தில் 4 வீடுகளும் மஹகும்புக்கடவல பிரதேசத்தில் 3 வீடுகளும் இவ்வாறு சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் , ஊவா மற்றும் தென் மாகாணங்களில் இடைக்கிடை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் போது குறித்த பிரதேசங்களில் 100 மில்லி மீற்றரை விட அதிக மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் இப் பிரதேசங்களில் தற்காலிகமாக காற்றின் வேகம் அதிகரிக்கக் கூடும். இதன் போது ஏற்படும் பாதிப்புக்களிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதே வேளை இரத்தினபுரி, களுத்துறை, மாத்தறை, கேகாலை, நுவரெலியா மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தில் கொலன்ன, கொடகாவெல மற்றும் வெலிகேபொல ஆகிய பிரதேசங்களுக்கும், களுத்துறை மாவட்டத்தில் புளத்சிங்கள பிரதேசத்திலும், மாத்தறையில் பஸ்கொட மற்றும் கொடபொவிலும் கேகாலை மாவட்டத்தில் யட்டியாந்தோட்டையிலும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.