Header Ads



வெளிமாவட்ட மக்கள் எவரும் 20 ஆம் திகதிவரை, கொழும்பைவிட்டு வெளியேற முடியாது

(ஆர்.யசி)

மேல்மாகாணத்தில் தங்கியுள்ள, சுய தொழில்களில் ஈடுபடும் வெளிமாவட்ட மக்கள் எவரும்  எதிர்வரும் 20 ஆம் திகதி வரையில் கொழும்பை விட்டு வெளியேற முடியாதென அரசாங்கம் தடை விதித்துள்ளது. சுகாதார அதிகாரிகளின் கோரிக்கைக்கு அமைய இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் கூட்டம்  மற்றும்  ஆளும் கட்சி பாராளுமன்றக்குழு கூட்டம்  இடம்பெற்றது. இக்  கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமைகள் குறித்தே அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதில் நாடளாவிய ரீதியில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை மேலும் நீட்டிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டிருந்தது.

குறிப்பாக தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு பின்னரும் நாட்டில் தற்போதுள்ள கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு சட்டத்தை பிறப்பிக்க  வேண்டும் என்றே அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது.

அடுத்த மூன்று வாரங்களேனும் ஊரடங்கு சட்டத்தை பிறப்பித்து சுகாதார அதிகாரிகள் மூலமாக முன்னெடுக்கப்படும் தொற்றுநீக்கள் வேலைத்திட்டங்களை துரிதமாக முன்னெடுக்க வேண்டிய தேவைகள் குறித்து தீர்மானங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எனினும் முழு நாட்டினையும் முடுக்கி ஒரே நேரத்தில் தொற்றுநீக்கள் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாதென ஜனாதிபதி தெரிவித்துள்ள நிலையில் சுகாதார அதிகாரிகள் முன்வைக்கும் ஆலோசனைகளுக்கு அமைய அடுத்த கட்டமாக நடவடிக்கை எடுக்கவும் இணக்கம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாட்டில் தற்போது நிலவும் உணவு தட்டுப்பாடு குறித்தும் அத்தியாவசிய பொருட்களை உற்பத்தி செய்வதில் அரசாங்கம் துரிதமாக முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

விவசாயத்தை பலப்படுத்துவதன் மூலமாக உள்நாட்டு மரக்கறிகளை கொண்டே அடுத்து வரும் மாதங்களை சமாளிக்க வேண்டியுள்ளதாகவும், இறக்குமதிகள் இப்போதைக்கு சாத்தியமில்லை என்றும் அமைச்சர்கள் எடுத்துக் கூறியுள்ளனர்.

மேலும்  வெளிமாவட்ட மக்களை எதிர்வரும் 20ம் திகதிவரை சொந்த ஊருக்கு அனுப்புவதில்லை என அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது. கடந்த காலங்களில் இருந்து கொழும்பில் வேலை செய்துவரும் வெளிமாவட்ட மக்கள் தமது சொந்த ஊர்களுக்கு சில்லா வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகின்ற போதிலும்  சுகாதாரதுறையின் கோரிக்கைப்படி மேல்மாகாணத்தில் தங்கியுள்ள வெளிமாவட்ட மக்களை எதிர்வரும் 20 ஆம் திகதிவரை சொந்த ஊருக்கு அனுப்புவதில்லை என அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது. 

No comments

Powered by Blogger.