Header Ads



மே 15 க்குள் நாடு வழமைக்கு திரும்பினால், ஜூன் 20ல் தேர்தல்

மே மாதம் 15ம் திகதிக்குள் நாடு வழமைக்குத் திரும்பினால் மட்டுமே எதிர்வரும் ஜூன் மாதம் 20ம் திகதி பொதுத் தேர்தல் நடத்தப்பட முடியும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுகை குறிப்பிடத்தக்களவு கட்டுப்படுத்தப்பட்டு நாடு வழமைக்கு திரும்பினால் மட்டுமே பொதுத் தேர்தலை நடத்த முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்வதற்கு வேட்பாளர்களுக்கு ஆகக் குறைந்தது ஐந்து வார கால அவகாசம் தேவைப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான ஓர் பின்னணியில் மட்டுமே சுயாதீனமானதும் நீதியானதுமான ஓர் அடிப்படையில் நாட்டில் தேர்தலை நடாத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தலை நடாத்துவதற்கு சுகாதார தரப்பினர் அனுமதி வழங்க வேண்டும் எனவும் அதன் பின்னர் அரசியல் கட்சிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடனும் தேர்தல் ஆணைக்குழு பேச்சுவார்த்தை நடாத்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் 75 முதல் 80 வீதமானவர்கள் வாக்களிப்பது வழமையானது எனவும் கொரோனா காரணமாக 10 வீதம் குறைவடைந்தால் அதனை ஏற்றுக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும் இதனை விடவும் குறைந்தளவு வாக்காளர்கள் வாக்களித்தால் தேர்தல் குறித்த நம்பகத்தன்மையில் சந்தேகம் ஏற்படலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments

Powered by Blogger.