Header Ads



கொழும்பு 12 க்கு கொரோனா தொற்றிய, விதம் குறித்து எந்த சான்றுகளும் கண்டறியப்படவில்லை

(எம்.எப்.எம்.பஸீர்)

இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள அதிகமான கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் கொழும்பு மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இறுதியாக அடையாளம் காணப்பட்ட பிலியந்தலை மற்றும் கொழும்பு 12 - பண்டாரநாயக்க மாவத்தை தொற்றாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றிய விதம் குறித்து தெளிவான எந்த சான்றுகளும் சுகாதார, பாதுகாப்புப் பிரிவினரால் இதுவரை கண்டறியப்படவில்லை என கூறப்படுகின்றது.

இந் நிலையில் கொரோனா வைரஸ் பரவலின் அதி ஆபத்தான நிலைமையாக கருதப்படும் சமூகப் பரவல் நிலைமையை நோக்கி இலங்கை பயணிக்கின்றதா என்ற சந்தேகமும் சுகாதார அதிகாரிகளிடம் தற்போது எழுந்துள்ளது.

எவ்வாறாயினும் இலங்கையில் சமூக பரவல் நிலைமை உள்ளதாக இதுவரை எந்த உறுதியான சான்றுகளும் கிடைக்கவில்லை என சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவிக்கும் நிலையில், கொழும்பில் புதிதாக அடையாளம் காணப்பட்ட  நோயாளர்களுக்கு எவ்வாறு அந்த தொற்று ஏற்பட்டது என்பது குறித்து தொடர்ந்தும் ஆராய்ந்து வருவதாக அந்த பிரிவின் பிரதானி ஒருவர் கூறினார்.

தற்போது நாளொன்றுக்கு 600 பி.சி.ஆர். பரிசோதனைகள் கொரோனா தொற்றாளர்களை அடையாளம் காண செய்யப்பட்டாலும், அதனை மேலும் அதிகரிக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதன்படி இன்று முதல் சமூகத்தில் உள்ள கொரோனா தொற்றாளர்களை கண்டறிய, கொழும்பு பகுதியில் விஷேட பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

கொழும்பு கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பண்டாரநாயக்க மாவத்தையில் அடையாளம் காணப்பட்ட முதலாவது தொற்றாளரான 59 வயதான பெண், இந்தியாவுக்கு யாத்திரை சென்று வந்து, தனிமைப்படுத்தல் காலத்தையும் நிறைவு செய்திருந்த நிலையில் 31 நாட்களின் பின்னரேயே கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டிருந்தார்.

விமானத்தில் இருந்த வெளிநாட்டு தொற்றாளர் ஒருவரிடம் இருந்து குறித்த பெண்ணுக்கு கொரோனா தொற்றியிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டாலும் அது உறுதி செய்யப்படாத நிலையில்,  அவர் இலங்கைக்கு வந்த பின்னர் அவருக்கு தொற்று ஏற்பட்டதா என்ற சந்தேகமும் உள்ளது. அப்படியானால்  எவ்வாறு அங்கு வைத்து அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியது என்பது கேள்வியாக உள்ளது.

 அவரிடம் இருந்து அந்த பிரதேசம் முழுதும் கொரோனா வைரஸ் பரவியதாக நம்பப்பட்டாலும், அதனை உறுதி செய்யும் விதமாக எந்த அறிவியல் சான்றுகளும் இதுவரை இல்லை.

அதன்படி அவரிடம் இருந்து பண்டாரநாயக்க மாவத்தையில் ஏனையோருக்கு கொரோனா பரவியதா அல்லது வேறு எவர் மூலமாவது அப்பகுதியெங்கும்  கொரோனா பரவியதா என்பது தொடர்பில் சுகாதார துறை தொடர்ச்சியாக அவதானம் செலுத்தி வருகின்றது.

இதனிடையே,  கொழும்பின் பிலியந்தலை பகுதியில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளரான மீன் வர்த்தகருக்கும் எங்கிருந்து கொரோனா தொற்றியது என தெளிவான ஆதாரங்கள் இல்லை. அவருடன் பழகிய கொரோனா தொற்று சந்தேக நபர்கள் எவரும் இல்லாத நிலையில்,  அவுஸ்திரேலியாலிருந்து வந்த அவரது சகோதரர் ஒருவருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது பரிசோதனைகளில் உறுதியாகியுள்ளது. 

இவ்வாறான பின்னணியில் அவருக்கு எப்படி கொரோனா தொற்று ஏற்பட்டது என்பது குறித்து சந்தேகம் எழுந்துள்ளது.  பிலியந்தலை தொற்றாளருக்கு வேதர பகுதியில் மீன் விற்பனை நிலையம் உள்ள நிலையில், அங்கு வந்த தொற்றாளர் ஒருவர் ஊடாக கொரோனா தொற்று பரவியதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இவ்வாறான உறுதியற்ற, தெளிவற்ற நிலைமைகள் இருக்கும் நிலையில்,  தற்போதைய நிலைமையை கட்டுப்படுத்த,  அதிகமான பி.சி.ஆர். பரிசோதனைகளை முன்னெடுக்க வேண்டும் என  வைத்திய பரிசோதனை நிலைய  நிபுணர்கள்  நிறுவனத்தின் தலைவர்  ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார். 

அத்துடன் சமூக மட்டத்தில் தேடிச் சென்று பரிசோதனைகளை முன்னெடுக்கும் நிலைமை ஒன்றும் ஏற்படுத்தப்படல் வேண்டும் என அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். 

தற்போதைய நிலைமையில், உறுதியாக சமூக பரவல் குறித்த நிலைமை உள்ளதாக கூற முடியாவிட்டாலும், அவ்வாறான அபாயம் இல்லை என மறுக்கவும் முடியாது என அவர் சுட்டிக்காட்டினார்.

No comments

Powered by Blogger.