Header Ads



''கணவனுக்கு கொரோனா கசாயம் கொடுத்து, சொந்த வீட்டிலேயே 100 பவுன் கொள்ளையடித்த மனைவி'' - அதிர்ச்சி தகவல்


தூத்துக்குடியில் கணவருக்கு கொரோனா கசாயம் கொடுத்து மயங்கச் செய்து, வீட்டில் இருந்த 100 சவரன் நகைகளை கொள்ளையடித்த மனைவி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி தாளமுத்து நகரைச் சேர்ந்தவர் 58 வயதான வின்சென்ட். துறைமுக ஊழியரான இவரது மனைவி ஜான்சி ஏலச்சீட்டு நடத்தி வருகிறார். வின்செண்ட் - ஜான்சி தம்பதிக்கு இரு மகள்கள், இருவருக்கும் திருமணமான நிலையில் வீட்டில் கணவன் மனைவி மட்டும் வசித்து வருகின்றனர்.

ஊரடங்கு உத்தரவால் இருவரும் வீட்டுக்குள் முடங்கி இருந்த நிலையில் உள்பக்கம் பூட்டப்பட்ட வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த 100 சவரன் நகைகளை கொள்ளையன் அள்ளிச்சென்றுவிட்டதாக தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் வின்சென்ட் புகார் அளித்தார்.

காவல்துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். வயதான காலத்தில் வங்கியில் வைக்காமல் 100 சவரன் நகைகளை வீட்டில் வைத்தது ஏன்? என்ற கோணத்தில் நடத்தப்பட்ட விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின.

துறைமுக ஊழியரான வின்சென்ட் மிகவும் சிக்கனமாக இருந்து சேமித்த பணத்தைக் கொண்டு பழைய நகைகளை வாங்கி சேமித்து வந்துள்ளார். அந்தவகையில் சுமார் 93 சவரன் நகைகளை வங்கியில் உள்ள லாக்கரில் பாதுகாப்பாக வைத்திருந்துள்ளார். சில தினங்களுக்கு முன்பாக வின்செண்ட் செல்போனுக்கு வங்கியில் இருந்து பேசுவதாக அழைப்பு ஒன்று வந்துள்ளது.

அதில் பேசிய பெண் ஒருவர், வங்கியில் பாதுகாப்புக் குறைபாடு உள்ளதால் தங்கள் மனைவியை அழைத்து வந்து நகையை எடுத்துச் சென்றுவிடுங்கள் என்று கூறியுள்ளார். இதையடுத்து வங்கி லாக்கரில் இருந்து நகைகளை மொத்தமாக எடுத்து வந்து வீட்டு பீரோவில் வைத்திருந்த நேரத்தில் தான் இந்த கொள்ளை சம்பவம் நடந்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.

வங்கியில் விசாரித்தபோது வங்கியில் இருந்து வின்சென்ட்டுக்கு யாரும் போன் செய்யவில்லை என்பதை உறுதிப்படுத்தினர். வீட்டில் இருவர் மட்டுமே இருக்கும் நிலையில் பூட்டப்பட்ட வீட்டுக்குள் யார் வந்திருப்பார்கள் என்று அவரது மனைவி ஜான்சியிடம் விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரனாக பதில் அளித்து காவல்துறையினரிடம் வசமாக சிக்கிக் கொண்டார்.

ஏலச்சீட்டு நடத்திவந்த ஜான்சிக்கு பலர் ஏலத்தொகையை கட்டாமல் கம்பி நீட்டியதால் 10 லட்சம் ரூபாய் வரை கடன் இருந்துள்ளது. மாதாமாதம் வட்டி மட்டும் 35 ஆயிரம் ரூபாய் கட்டவேண்டிய நிலையில் கணவர் உலகமகா சிக்கன திலகமாக இருந்ததால் 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே கொடுத்துள்ளார்.

வீட்டில் உள்ள பணத்தை நகையாக வாங்கி அத்தனை நகையையும் வங்கியில் கொண்டு வைத்து விடுவதால், பணத்தேவைக்கு கணவனிடமே கொள்ளையடிக்க முடிவுசெய்தார் ஜான்சி.

அதன்படி வீட்டிற்கு வெளியே போய் வேறொரு போனில் இருந்து வங்கி லாக்கரில் உள்ள நகைகளுக்கு பாதுகாப்பில்லை என்றும் அதனை எடுத்து செல்ல அறிவுறுத்தி, தனது கணவரது செல்போனுக்கு குரலை மாற்றி பேசியுள்ளார் ஜான்சி. திட்டப்படியே வங்கி லாக்கரில் இருந்த நகைகள் வீட்டு பீரோவுக்கு வந்து விட்டது.

அங்கிருந்து நகையை மொத்தமாக எடுத்துச்செல்ல திட்டமிட்ட ஜான்சி , கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்ப கசாயம் தருவதாக ஏமாற்றி அதில் தூக்க மாத்திரையை கலந்து கொடுத்ததால், அதனை குடித்த வின்செண்ட் ஆழ்ந்த தூக்கத்திற்குச் சென்று விட்டார்.

பின்னர் அவரது இடுப்பில் இருந்து சாவிக்கொத்தை எடுத்து பீரோவை திறந்து 93 சவரன் நகையை அள்ளிச்சென்று வீட்டுக்கு வெளியே புதைத்துள்ளார். பின்னர் வீட்டுக்குள் வந்து வீட்டை உள்பக்கமாக பூட்டிவிட்டு, பீரோவில் இருந்த துணிகளை கலைத்து போட்டுவிட்டு வீட்டு சாவியை பீரோவுக்கு பின்பக்கம் தூக்கி வீசிவிட்டதாக கூறப்படுகின்றது. ஜான்சி சுட்டிக்காட்டிய இடத்தில் இருந்து 93 சவரன் நகைகளை கைப்பற்றிய போலிஸார், அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

முன்னதாக காலையில் வின்சென்ட் தனது வீட்டில் கொள்ளை நடந்திருப்பதாக போலிஸில் புகார் அளித்தபோது கொள்ளை குறித்து நிருபர்களிடம் அழுதபடி பேட்டி கொடுத்து அசத்தியிருக்கிறார் ஜான்சி.

அதேபோல போலிஸார் ஊரடங்கு நெருக்கடியில் இருந்த நிலையில் அங்கு கொண்டுவரப்பட்ட மோப்ப நாய் ஒன்று, அருகில் நின்ற ஜான்சியை கவ்விப்பிடிக்காமலும் , நகை புதைக்கப்பட்ட இடத்திற்கு செல்லாமலும் ,நான்கு தெருவில் ஓடிவிட்டு ஓய்ந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

போலிஸார் நடத்திய விசாரணையின் போது, தனது கணவர் போதைக்கு அடிமையாகி, வீட்டுச் செலவுக்கு பணம் தராததால் சொந்த வீட்டிலேயே கொள்ளையடித்து நாடகமாடியதாக ஜான்சி வாக்குமூலம் கொடுத்துள்ளார் என போலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments

Powered by Blogger.