Header Ads



SLFP யினரை பொதுஜன முன்னணியுடன் சேர்ப்பது, கொரோனா நோயாளியை வீட்டிற்குள் அனுமதிப்பது போன்றது

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரை பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜன முன்னணியுடன் சேர்த்துக் கொள்ளும் விடயமானது, கொரோனா வைரஸ் நோயாளியை வீட்டிற்குள் அனுமதிப்பது போன்ற ஆபாயகரமான செயற்பாடு என பொதுஜன முன்னணி விமர்சித்துள்ளது.

அந்த ஆபத்தையும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி எதிர்கொண்டாலும், பொதுத் தேர்தலின் பின்னர் சுதந்திரக் கட்சியினர் காலை வாரிவிட்டால் புதிய அரசாங்கம் பாரிய நெருக்கடியை சந்திக்க நேரிடும் என்று பொதுஜன முன்னணியின் கேகாலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட பொதுஜன முன்னணி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரை கொரோனா வைரஸிற்கு ஒப்பிட்டு கருத்து முன்வைத்தார்.

“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கூட்டணியான மிகவும் பலமான வகையில் பொதுத் தேர்தலை எதிர்கொள்கின்றது. விசேடமாக பொதுஜன முன்னணியின் அனைத்து அமைப்பாளர்களும் போட்டியிட எதிர்பார்த்துள்ளனர்.

அதற்கான கட்சியின் ஸ்தாபகரான முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவும் அனுமதியளிப்பார் என்றும் நம்பிக்கை வெளியிடுகிறோம்.

இந்நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களை எம்முடன் சேர்த்துக் கொள்வது பற்றிய பல்வேறு விமர்சனங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவர்களை இணைத்துக் கொள்வது குறித்து எமக்குப் பிரச்சினையில்லை.

ஒருவிதமான ஆபத்து இருக்கின்றதுதான். விசேடமாக பொதுத் தேர்தலின் பின்னர் அரசாங்கம் அமைத்ததன் பிறகு ஒரு சந்தர்ப்பத்தில் சுதந்திரக் கட்சியினர் எம்மிடமிருந்து பிரிந்து சென்றால் அது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோருடைய வேலைத்திட்டங்கள் சிந்தனைகள் நெருக்கடிக்கு இட்டுச்சென்றுவிடும் என்ற ஆபத்து நிலை காணப்படுகின்றது.

கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்டுள்ள நோயாளர் ஒருவரை வீட்டிற்குள் சேர்த்துக் கொண்டால் ஏற்படுகின்ற ஆபத்தான நிலைமையைப் போன்றே சுதந்திரக் கட்சியினரையும் எமது கூட்டணிக்குள் சேர்த்துக் கொள்வதால் ஏற்படும்.

இந்த விவகாரத்தில் மிகவும் சூட்சுமமான முறையில் தேர்தலை வெற்றிகொள்ள வைப்பதற்கு ஆதரவாளர்கள் சரியான தீர்மானங்களை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்” என கூறியுள்ளார்.

1 comment:

  1. இந்த சுதந்திரக்கட்சி கொரோனா வைரஸ்காரனை கட்சியுடன் சேர்ப்பதை விட்டு விட்டு உடனடியாக வழக்கைப் பதிவு செய்து 270 பேரை அநியாயமாகக் கொலை செய்த படுகொலைக்குற்றத்துக்கு சிறையிடலமைத்து உரிய தண்டனையைக் கொடுக்க ஏற்பாடு செய்வது தான் தற்போது செய்யவேண்டியது.

    ReplyDelete

Powered by Blogger.