பொதுமக்கள் கூடுமிடங்கள் மூடல் - கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க முன்னாயத்தம்
-ஏ.எச்.ஏ. ஹுஸைன் -
கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் முன்னாயத்த பாதுகாப்பு நடவடிக்கையாக காத்தான்குடி நகர சபை நிருவாகத்தின் கீழ் வரும் பொது நூலக வாசிப்புப் பகுதி, சிறுவர் பகுதி, கடற்கரை சிறுவர் பூங்கா, வாவிக்கரையோர சிறுவர் பூங்கா என்பனவற்றை மறு அறிவித்தல்வரை மூடியுள்ளதாக அந்நகர முதல்வர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பான பொது அறிவித்தல்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் காத்தான்குடி நகர முதல்வர் எஸ்.எச்.எம். அஸ்பர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக செவ்வாய்க்கிழமை 17.03.2020 தகவல் வெளியிட்ட அவர் மேலும் கூறியதாவது, கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்கும் சகல வித முன்னாயத்தங்களையும் காத்தான்குடி நகர சபை நிருவாகம் மேற்கொண்டுள்ளது.
அதன் ஒரு அம்ச நடவடிக்கையாக பொதுமக்கள் கூடும் சந்தர்ப்பங்களைத் தவிர்த்துள்ளோம்.
உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதேவேளை, பொதுமக்கள் அநாவசியமாக பொது இடங்களிலோ வீடுகளிலோ கூடுவதை முற்றாக தவிர்த்துக்கொள்ளுமாறும், வெளியில் சென்று வீடு திரும்புபவர்கள் கைகளை நன்கு சுத்தம் செய்து கொள்ளுமாறும் தனிப்பட்ட சுகாதாரத்தை கவனத்தில் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்' என்றார்.
Post a Comment