Header Ads



நூற்றுக் கணக்கான விடயங்களை நாங்கள் செய்து கொண்டே இருக்கின்றோம், அமீரலி

நாடாளுமன்றம் இம்மாதம் 2 திகதியில் இருந்து கலைக்கப்படலாம். இனி எமது பிரதேசத்தினை தேர்தல் ஆட்கொள்ளும் என்று முன்னாள் இராஜாங்க அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.எஸ்.அமீர்அலி தெரிவித்தார்.

ஓட்டமாவடி தாருல் உலூம் வித்தியாலயத்தில் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலை வளாகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. அந்நிகழ்வில் கலந்து கொண்ட போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

இனிவரும் காலம் புள்ளடி கேட்கும் காலமாக இருக்கும் என்று நினைக்கின்றேன். இம்மாதம் 2ஆம் திகதியில் இருந்து நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என்று பேசப்படுகின்றது. மிக விரைவில் எமது பிரதேசத்தினை தேர்தல் ஆட்கொள்ளும் என்று நினைக்கின்றேன்.

அந்தவகையில் கல்குடாவின் தலைமைத்துவத்தினை கல்குடாவில் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்கின்ற அல்லது கல்குடாவில் இருக்கின்ற 38ஆயிரம் வாக்குகளை மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக வாக்குகளை கொண்ட கல்குடாவில் இருந்து ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை பெற்றுக் கொள்ள வேண்டும் என்கின்ற விடயத்திற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும்.

நீங்கள் தயாராக இல்லாத போது இந்த பிரதேசத்தில் ஒரு பாடசாலை, ஒரு அதிபர், பள்ளிவாசல் சமூகத்துடன் பேசி இந்த காணியை பெற்றமை, பாடசாலையை கொண்டு வந்தமை இவைகளெல்லாம் நீங்கள் எதிர்பார்த்த நிகழ்வுகள் அல்ல. ஆனால் எங்களுடைய பார்வை, நோக்கு எங்களுக்கு தெரியும். நீங்கள் தரும் புள்ளடியால் நாங்கள் உங்களுக்கு செய்து தர நினைக்கின்றோம்.

இப்படி நூற்றுக் கணக்கான விடயங்களை நாங்கள் செய்து கொண்டே இருக்கின்றோம். இன்னும் உங்கள் பிள்ளைகள் மற்றும் ஏனையவர்களுக்கும் இந்த சேவை கிடைக்க வேண்டும். அவ்வாறெனில் கல்குடாவிலுள்ள ஒட்டுமொத்த வாக்காளர்களும் ஒருமித்த கருத்தோடு செயற்படுவீர்களாக இருந்தால் வெற்றியை உங்களுக்குள் தாங்கிக் கொள்ள முடியும்.

உங்களுடைய பிள்ளை அமைச்சராக இருந்து பேசுகின்ற பொழுது அந்த அந்தஸ்த்து, மதிப்பையும் நீங்கள் பெற்றுக் கொள்ளக் கூடிய பெற்றோர்களாக, ஊராக, தொகுதியாக, மாவட்டமாக இருக்கும் என்று நம்புகின்றேன். எனவே எல்லோருடய ஒத்துழைப்பையும் நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என்றார்.

No comments

Powered by Blogger.