Header Ads



அங்கொடை நாட்டுக்கோர் அருட்கொடை


- Dr Ziyad -

அங்கொடை என்ற பெயரை கேள்வியுற்றதுமே பலருக்கு நினைவுக்கு வருவது NIMH (National Institute of Mental Health) எனும் மனநோய் வைத்தியசாலை.

இப்போது இலங்கையில் Corona Virus தொற்றின்போதும் அதே அங்கொடை என்ற சொல் உச்சரிக்கப்படுகிறது. அது Base Hospital Angoda (IDH). 

தலைநகரில் பல பிரபல அரச வைத்தியசாலைகள் இருக்கும்போது Corona virus தொற்று சிகிச்சைக்கான முதல் தெரிவாக Angoda வைத்தியசாலை இருப்பதன் மர்மம் என்ன?

முதலாவது சீன நோயாளி மற்றும் இப்போது கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு நோயாளிகளும் அங்குதான் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அங்கொடை வைத்தியசாலையானது 160 ஆண்டுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்டது. ஆதார வைத்தியசாலையாக திகழ்ந்த இவ்வைத்தியசாலையில் (Infectious Disease Hospital - IDH) 2010 இல் நவீன வசதிகளை கொண்ட டெங்கு நோய் பிரிவு ஆரம்பிக்கப்பட்டது. 

இதில் Dengue , HIV/AIDS, Influenza போன்ற சிக்கலான நோய் நிலைமையில் உள்ள நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றனர்.

220 படுக்கை வசதிகளை கொண்ட இவ்வைத்தியசாலையில் ICU மற்றும் சிறுபிள்ளை பிரிவுகளும் உண்டு. இலங்கையின் ஏனைய வைத்தியசாலைகள் போல் இதுவும் நோயாளர்களால் நிரம்பி வழியும்.

சன நெரிசல் நிறைந்த கொழும்பின் மத்திய பகுதியில் அமைந்திருந்தாலும் கட்டிடங்கள், காற்றோட்டம், கழிவகற்றல் போன்றவை தொற்றுநோய் பரவாமல் வடிவமைக்கப்பட்டுள்ளது. கட்டிடங்களுக்கிடையே காணப்படும் மரங்கள் பாதுகாப்பான சூழலை வழங்குகிறது.

இங்கு கடமை புரியும் சகல ஊழியர்களும் தொற்று நோயாளர்களை கையாளுதல், பாதுகாப்பு நடவடிக்கைகள் (universal precautions) என்பவற்றுக்கு விசேடமாக பயிற்றுவிக்கப்பட்டு நடைமுறைப் படுத்துகின்றனர். இலங்கையில் தொற்றுநோய்க்கென்று விசேடமாக அமைக்கப்பட்ட வைத்தியசாலை இதுவாகும். 

2017 இல் தொற்றுநோய் தேசிய வைத்தியசாலையாக National Institute of Infectious Diseases (NIID) பிரகடனப்படுத்தப்பட்டது.

இதுவரை இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட 3 Corona Virus தொற்றுநோயாளர்களும் இங்குதான் அனுமதிக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றனர். (அதிலும் 3வது நோயாளி சிலாபம் வைத்தியசாலையில் இருந்து இங்கு இடமாற்றப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.)

பல ஊர்களில் Corona வுக்கு அஞ்சி ஆர்ப்பாட்டங்கள் செய்யும்போது ஆர்ப்பாட்டமே இல்லாமல் அமைதியான முறையில் நோயாளிகளை கவனிக்கும் வைத்தியர்கள், தாதியர் உட்பட சகல ஊழியர்களுக்கும் நாடே கடமைப்பட்டுள்ளது.

தொற்றுநோயாளர்களை தனிமைப்படுத்தி கவனிக்கும் இதுபோன்ற வசதிகள் ஏனைய வைத்தியசாலைகளில் குறைவு. Corona வுக்கென்று அடையாளப்படுத்தப்பட்ட பல வைத்தியசாலைகள் நோயாளர்களால் நிரம்பி வழிகின்றன. அங்கொடை வைத்தியசாலைக்கு அப்பாலும் இந்த Corona பரவாமல் இருக்க பிரார்த்திப்போம்.

அங்கொடை நாட்டுக்கோர் அருட்கொடை!!

No comments

Powered by Blogger.