Header Ads



பப்பாசி மரத்தை வெட்ட முஸ்தீபு; சிறுவன் பலி

மட்டக்களப்பு, மண்டூர் பிரதேசத்தில் பப்பாசி மரமொன்றை வெட்டி வீழ்த்த முயற்சித்த போது, குறித்த மரம், 10 வயதுடைய சிறுவன் மீது சரிந்து வீழ்ந்ததில் சிறுவன் படுகாயடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு; சிகிச்சை பலனின்றி, நேற்றிரவு (29) உயிரிழந்துள்ளதாக, வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

மண்டூர், பலாச்சோலையைச் சேர்ந்த ரவிக்குமார் யபேஸ் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தமது வீட்டின் காணியிலிருந்த 30 அடி கொண்ட  பப்பாசி மரத்தை, உயிரிழந்த மேற்படி சிறுவனும் அவரின் 13 வயதுச் சகோதரனும் சேர்ந்து, கடந்த 25ஆம் திகதி பெற்றோருக்குத் தெரியாமல் வெட்டி வீழ்த்த முயற்சித்துள்ளனர். 

இதன்போது, 13 வயதுச் சகோதரன், அந்த மரத்தில் கயிற்றைக் கட்டி கீழே வீழ்த்த கயிற்றை இழுத்துக் கொண்டார். உயிரிழந்த சிறுவன், மரத்தைக் கோடாலியால் வெட்டும் போது எதிர்பாராத விதமாக திடீரென மரம் சரிந்ததில் சிறுவனின் தலை படுகாயடைந்த நிலையில், மட்டு. போதனா வைத்தியசாலையின்  தீவிர சிகிச்சைப் பிரிவில்  அனுமதிக்கப்பட்டிருந்தார். 

இந்த நிலையிலேயே, சிகிச்சை பலனின்றி  சிறுவன் நேற்றிரவு உயிரிழந்துள்ளார். பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம், உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுமென, பொலிஸார் தெரிவித்தனர்.

கனகராசா சரவணன்

No comments

Powered by Blogger.