Header Ads



உள்நாட்டு வளர்ச்சிக்கு முக்கியத்துவமளிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோரிக்கை


தற்போது இலங்கை முகங்கொடுத்திருக்கும் முக்கிய சவால் உடனடி பொருளாதார அபிவிருத்தியை அடைந்துகொள்வதென்றும் கடந்த காலத்தில் நாம் முகங்கொடுத்த பாதுகாப்பு தொடர்பான பல பிரச்சினைகள் ஏற்பட்டதற்கான காரணம் வரப்பிரசாதமற்ற மக்கள் கூட்டத்தினர் பொருளாதாரத்தை சுரண்டியமையுமாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். இனம், மதம், மொழி அல்லது வாழும் பிரதேசத்தை கவனிக்காது சமுதாயத்தில் அனைவருக்கும் சமமான பொருளாதார வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க முடியுமாயின் இவ்வாறான பேதங்கள் இலங்கையில் ஏற்படாதென்றும் நம்பிக்கை வெளியிட்டார். 

தான் முன்வைத்துள்ள மக்கள்மையப்பட்ட பொருளாதார மாதிரி, இவ்விடயங்களை கவனத்திற்கொண்டு தயாரிக்கப்பட்டதாகுமென தகவல் தொடர்பாடல் தொழிநுட்பத்துறை சார்ந்தவர்களுடன் இன்று (04) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

“பொருளாதார முன்னேற்றத்தின் பிரதிபலன்களை மக்கள் அனைவருக்கும் விசேடமாக, வறிய மக்களுக்கு கிடைக்கப்பெறும் என்பதை நாம் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். அவர்களை வறிய நிலையிலிருந்து மீட்டெடுத்து, பொருளாதாரத்தின் சிறப்பான பங்காளர்களாக மாற்றி அவர்களின் வாழ்க்கைத்தரத்தை துரிதமாகவும் சிறப்பானதாகவும் முன்னேற்ற வேண்டும்” என்று ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். நவீன டிஜிட்டல் யுகத்தின் தேவைக்கேற்ப உயர் தரத்திலான திறமைவாய்ந்தவர்களை உருவாக்க வேண்டுமெனவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், தொழிநுட்பத்தை அடிப்படையாகக்கொண்டு பொருளாதாரத்தை மிஞ்சிய விரிவுபடுத்தப்பட்ட தொழில்வாய்ப்புகளுக்கு அவசியமான திறன் அபிவிருத்தியை மக்களுக்கு சென்றடைய செய்யும் சவாலை தமது அரசாங்கம் ஏற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார். 

“எமது பாடசாலை, பயிற்சி நிலையங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களிலிருந்து உருவாகும் தொழிற்படையினருக்கும் தொழிற்சந்தையின் கேள்விக்கும் இடையில் பாரியதொரு இடைவெளி காணப்படுகின்றது. இன்று தகவல் தொழிநுட்பத்துறை முகங்கொடுத்துள்ள பயிற்றப்பட்ட தொழிலாளர்களின் பற்றாக்குறையை அது எடுத்துக்காட்டுகின்றது. அதனால் எமது கல்வித்துறையில் காணப்படும் பிரச்சினைகளுக்கான குறுகிய மற்றும் நீண்டகால தீர்வுகளை பெற்றுக்கொள்வது அவசியமாகும்” என்று ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார். அரச துறையின் மேலாண்மை தரச் சரிவைப் பற்றியும் குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், தேவையற்ற கட்டுப்பாடுகளை இலகுபடுத்தி அல்லது நீக்கி தடைகளற்ற பொருளாதார செயற்பாட்டிற்கு வாய்ப்பளிக்கக்கூடிய சூழலை உருவாக்குவது தமது அரசாங்கத்தின் முக்கிய பணியெனவும் இந்த இலக்கை நோக்கி செல்வதற்கு நவீன தொழிநுட்பத்தை பொருளாதாரத்துடன் இணைக்க வேண்டுமெனவும் சுட்டிக்காட்டினார். 

கலந்துரையாடலில் ஈடுபட்ட தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப திறன் சபையின் தலைவர் சிந்தக்க விஜேவிக்ரம, தகவல் தொழிநுட்பத்துறை மென்மேலும் வளர்ச்சிபெறும் துறை என்றும் 28 வருடங்களுக்குப் பின்னர் இத்துறையினருடன் கலந்துரையாடிய முதல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் என்றும் குறிப்பிட்டார். எமது மென்பொருளுக்கு உலகம் முழுவதிலும் உயர்தரமான கேள்வியுள்ளதென குறிப்பிட்ட சபையின் பொதுச் செயலாளர் ஷாந்த யாப்பா, தொழிநுட்பத் துறையின் உள்நாட்டு வளர்ச்சிக்கு முக்கியத்துவமளிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அவர்களிடம் கோரிக்கைவிடுத்தார். 

Global Sourcing Association மூலம் இலங்கை மென்பொருள் மற்றும் சேவை சங்கத்திற்கு வழங்கப்படும் ‟The Delivery Destination of the Year” விருது சங்கத்தின் தலைவர் ரணில் ராஜபக்ஷவினால் ஜனாதிபதி அவர்களுக்கு கையளிக்கப்பட்டது.

தகவல் தொடர்பாடல் தொழிநுட்பத்துறை சார்ந்த பலரும் ஜனாதிபதியின் ஆலோசகர் லலித் வீரதுங்கவும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர். 

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2020.03.04

No comments

Powered by Blogger.