மட்டக்களப்பு கல்வி வலயத்தின் புதிய பணிப்பாளராக சுஜாதா
-ஏ.எச்.ஏ. ஹுஸைன் -
மட்டக்களப்பு கல்வி வலயத்தின் புதிய பணிப்பாளராக சுஜாத்தா குலேந்திரகுமார் கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளரால் நியமிக்கப்பட்டதையடுத்து செவ்வாய்க்கிழமை 03.03.2020 அவர் கடமைப் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.
மட்டக்களப்பு கல்வி வலய அலுவலகத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
நிகழ்வில் கல்வி அதிகாரிகள், கல்வி வலய உத்தியோகத்தர்கள், அதிபர்கள், கல்வித்துறைசார் நலன் விரும்பிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்புக் கல்வி வலயத்தின் வலயக்கல்விப் பணிப்பாளராக இதுவரை கடமையாற்றிய இலங்கை கல்வி நிருவாக சேவை அலுவலர் வி. மயில்வாகனம் 02.03.2020 திங்கட்கிழமை சேவையில் இருந்து ஓய்வுபெற்றதையடுத்து சுஜாதா நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய கல்விப் பணிப்பாளர் சுஜாத்தா 2003ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை கல்வி நிருவாக சேவை திறந்த போட்டிப் பரீட்சையில் இலங்கையில் ஒரேயொரு தமிழ்ப் பெண்ணாக தெரிவுசெய்யப்பட்டார்.
இவர் இலங்கை ஆசிரியர் சேவையில் 9 வருடங்கள் சேவையாற்றிய சுஜாதா, உதவிக் கல்விப் பணிப்பாளராக 2 வருடங்களும்;, அதிபராக 5 வருடங்களும்;, நிருவாகத்துக்குப் பொறுப்பான பிரதிக்கல்விப் பணிப்பாளராக 8 வருடங்களும்; என மொத்தம் 24 வருடகால கல்விச்சேவை அனுபவத்தைக் கொண்ட சிரேஷ்ட உத்தியோகத்தர் ஆவார்.
மேலும், இலங்கைத் திறந்த பல்கலைக்கழகம், தேசிய கல்வி நிறுவகம் ஆகிய உயர்கல்வி நிறுவனங்களில் வருகைதரு விரிவுரையாளராகவும் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வளவாளராகவும் இவர் கல்விச் சேவையாற்றியுள்ளார்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பௌதீக விஞ்ஞானப் பட்டதாரியான இவர் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் கல்வி டிப்ளோமா கற்கை நெறியில் அதிவிசேட சித்தியையும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வி முதுமாணிப் பட்டத்தையும், பிரான்ஸ் சிற்றி யூனிவர்சிட்டியில் கல்வித் திட்டமிடல் மற்றும் முகாமைத்துவத்தில் கல்வி முதுமாணிப் பட்டத்தையும் இவர் பெற்றுள்ளார்.
வாழைச்சேனை இந்துக் கல்லூரி, மட்டக்களப்பு வின்சென்ற் மகளிர் தேசிய பாடசாலை ஆகியவற்றின் பழைய மாணவியான இவர்மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பின் சிரேஷ்ட உறுப்பினராகவும் மட்டக்களப்பு இந்து மகளீர் மன்றம், சுவாமி விபுலானந்தர் நினைவுப் பணிமன்றம் ஆகிய சமூன நல அமைப்புக்களில் இணைந்து செயற்பட்டு கல்வி, கலை கலாச்சார, பண்பாடு சார்ந்த சமூகப் பணியினை ஆற்றிவருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு புதிய கல்வி பணிப்பாளராக சுஜாத்தா நியமிக்கப் பட்டது பற்றி தமிழ் மற்றும் முஸ்லிம் ஊடகங்களில் இடம்பெறுகிற புகழுரைகள் அவர்மீதான மதிப்பையும் எதிர்பார்ப்பையும் அதிகரிக்கிறது. வாழ்த்துக்கள் சுஜாதா.
ReplyDeleteதமிழரும் முஸ்லிம்களும் உங்கள்மீது வைத்திருக்கிற மதிப்பு மகிமைப்படும் வகையில் வெற்றிகரமாகப் பணியாற்றுக என வாழ்த்துகிறேன்.