Header Ads



சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு விரிவான பொறுப்புக்கள்

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தல் மற்றும் அதனுடன் இணைந்த சமூக நலன் பேணல் பணிகளை இலகுபடுத்துவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களினால் கடந்த திங்களன்று தாபிக்கப்பட்ட கொவிட் -19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு பல்வேறு பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.
நிதியத்தை ஆரம்பித்து ஜனாதிபதி அவர்கள் ஜனாதிபதி நிதியத்திலிருந்து 100 மில்லியன் ரூபாவை வழங்கியிருந்தார். அதற்காக இலங்கை வங்கியின் நிறுவன கிளையில் தனியாக விசேட கணக்கொன்று திறக்கப்பட்டது. அதன் கணக்கிலக்கம் 85737373 ஆகும்.
சமூகப் பாதுகாப்பு நிதியத்தின் நோக்கள் கீழ்வருவனவாகும்.
  1. கொவிட் 19 தொடர்புடைய மருந்துகள், பரிசோதனை உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்து செலவுகளுக்கும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு தேவையான நிதித் தேவைகளை உடனடியாக ஏற்பாடு செய்தல்
  2. அத்தியாவசிய மக்கள் சேவைகளை வழங்குவதில் ஈடுபட்டுள்ள சுகாதாரத் துறை ஊழியர்கள் மற்றும் வசதிகள் வழங்குவோரின் சுகாதார மற்றும் பாதுகாப்புக்கு தேவையான அனைத்து செலவுகளுக்குமான ஏற்பாடுகளை செய்தல்.
  3. சிறுவர்கள், பெண்கள், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள், முதியவர்கள், அங்கவீனர்கள் மற்றும் இடர் நிலைக்குள்ளானவர்களுக்கு அடிப்படை தேவைகளை வழங்குதல்.
  4. கிராமிய மற்றும் தூரப் பிரதேசங்களில் உள்ள மருந்து நிலையங்கள், பரிசோதனை மற்றும் சிகிச்சை நிலையங்கள், குடும்ப சுகாதார சேவை உள்ளிட்ட பொதுச் சுகாதார சேவை முறைமையை முன்னேற்றி தொற்றும் நோய் இடர் நிலையை குறைப்பதற்காக இலங்கையின் பொதுச் சுகாதார சேவையை பலப்படுத்துவதற்கு தேவையான நிதியை வழங்குதல்
  5. சுதேச வைத்திய முறைமை மற்றும் சுகாதாரப் பாதுகாப்புப் பொருட்களின் உற்பத்தி மற்;றும் விநியோகத்தை மேம்படுத்தல் மற்றும் தேசிய மூலப்பொருட்கள், வளங்கள், அறிவு மற்றும் திறன்களை பயன்படுத்தி சுகாதார, துப்பரவு பொருட்கள் புத்தாக்க உற்பத்திகளை நோக்காகக் கொண்ட ஆராய்ச்சிகளை மேம்படுத்தல்.
  6. சர்வதேச சந்தைக்கு பாதுகாப்பு ஆடைகள், துப்பரவு உற்பத்திகளை அபிவிருத்தியை பரீட்சித்தலும் இலங்கையின் மருத்துவ,விஞ்ஞான அறிவைப் பயன்படுத்தி புத்தாக்கங்ளுக்கான ஆராய்ச்சிகளை மேம்படுத்தல்.
  7. பாரம்பரிய அதேநேரம் சுபீட்சமான வாழ்வொழுங்கை மதிக்கும், சேதன உரத்தை பயன்படுத்தி சுகாதாரமான மக்கள் வாழ்வொழுங்கை ஊக்குவிப்பதற்கான ஊடக மற்றும் கல்வி நிகழ்ச்சிகளை தயாரித்தல்.
  8. வள ஒதுக்கீடுகள், முறையான தேசிய கொள்முதல் முறைமை மற்றும் கட்டுப்பாட்டு நடைமுறைகள் மற்றும் வழிகாட்டல்களின் அடிப்படையில் உலக சுகாதார தாபனம், யுனிசெப், ஐநா அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கைக்கு அபிவிருத்தி நிதி உதவி வழங்கும்  முக்கிய பங்காளிகள் மற்றும் முகவர் நிறுவனங்கடன் இணைந்து நிதி திரட்டும் பணியை ஒருங்கிணைத்தல்
நிர்வாக, நிதி மற்றும் வங்கித் துறையில் உயர் திறமைகளுடன் கூடிய தொழில் வல்லுனர்களை கொண்ட சபையொன்றின் மூலம் சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியம் முகாமைத்துவம் செய்யப்படும். 

மொஹான் சமரநாயக்க
பணிப்பாளர் நாயகம்
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2020.03.26

No comments

Powered by Blogger.