சுவிஸர்லாந்தில் பாடசாலையை மூட, கொரோனாவை பயன்படுத்திய மாணவர்கள்
சூரிச்சிலுள்ள பள்ளி ஒன்றில் ஒரு மாணவனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் செய்தி பரவியுள்ளது.
பிரபல நாளிதழ் ஒன்றின் முதல் பக்கத்தில், சூரிச் பள்ளி ஒன்றில் ஒரு மாணவனுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியிருந்த ஒரு செய்தியை வாட்ஸ் ஆப்பில் யாரோ பகிர்ந்திருந்தார்கள்.
சூரிச் பள்ளி ஒன்றின் பிரின்சிபல் ஒருவர் கொடுத்த பேட்டி ஒன்றும் அதில் இடம்பெற்றிருந்ததாக் கூறப்பட்டிருந்தது.
Andreas Niklaus என்ற அந்த பிரின்சிபலிடம், அந்த பள்ளி ஊழியர்கள் சென்று, பத்திரிகைக்கு பேட்டி கொடுத்ததை எங்களிடம் கூட மறைத்துவிட்டீர்களே என்று கூற, நான் யாருக்கும் பேட்டி கொடுக்கவில்லையே என்று கூறியுள்ளார் Niklaus.
பின்னர்தான் தெரியவந்தது, யாரோ சில மாணவர்கள், பள்ளிக்கு விடுமுறை விடப்படவேண்டும் என்பதற்காக, தங்கள் கணினி வடிவமைப்புத் திறமையை பயன்படுத்தி போலியாக ஒரு செய்தித்தாளில் செய்தி வந்துள்ளது போல் வடிவமைத்து வதந்தி பரப்பியுள்ளார்கள் என்பது.
அந்த குறிப்பிட்ட செய்தித்தாளும், அந்த செய்தி போலி என்றும், இதுபோன்ற ஸ்கிரீன் ஷாட்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறும் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளதோடு, அந்த செய்தியை பரப்பியவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
Post a Comment