சமய அடிப்படையில் தேர்தலில், போட்டியிட முனைவது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் - ஆயர் இம்மானுவேல்
கத்தோலிக்க மக்களாகிய நாம் நாட்டு நலனையும் நமது இனத்தின் நலனையும் முன் நிறுத்தி சிந்திக்க அழைக்கப்படுகின்றோம். எனவே கத்தோலிக்க சமயம் சார்பாக கட்சியாக அல்லது சுயேட்சையாக தேர்தலில் போட்டியிடுவது மன்னார் மறை மாவட்டத்தின் கொள்கை அல்ல என மன்னார் மறைமாவட்ட ஆயர் பிடேலிஸ் லயனல் இம்மானுவேல் பெனாண்டோ தெரிவித்துள்ளார்.
மன்னார் மறைமாவட்ட ஆயர் மன்னார் மறைமாவட்ட இறை மக்களுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை (08) எழுதியுள்ள தவக்காலத் திரு மடலில் அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த மடலில் மேலும் குறிப்பிடுகையில்,
இந்த நாட்டு மக்களாகிய நாம் மீண்டும் ஒரு பொதுத் தேர்தலை எதிர் நோக்கி இருக்கிறோம். இந்த நாட்டில் வாழும் தமிழ் மக்களாகிய எமக்கு இருக்கும் முக்கியமான அரசியல் பலம் எமது வாக்களிக்கும் உரிமை தான்.
முன்னெப்போதும் இல்லாதவாறு தமிழ் மக்களின் அரசியல் களம் இன்று குழம்பிப் போய் உள்ளது.
இந்த நிலையில் மிகுந்த ஞானத்தோடும், நிதானத்தோடும் நாம் இந்தப் பொதுத் தேர்தலை சந்திக்க வேண்டியவர்களாக உள்ளோம்.
சமய அடிப்படையில் கட்சியாகவோ, சுயேட்சையாகவோ தேர்தலில் போட்டியிட முனைவது எதிர் காலத்தில் பாரிய பின் விளைவுகளை ஏற்படுத்தும்.
இது இன்று ஆட்டம் கண்டுள்ள தமிழர் ஒற்றுமையை இன்னும் அதிகமாக சிதைத்து சின்னா பின்னமாகி விடும்.
இன்றைய சூழ் நிலையில் நாம் உணர்ச்சிபூர்வமாக சிந்திக்காமல் அறிவு பூர்வமாக சிந்திக்க வேண்டியவர்களாக உள்ளோம்.
கத்தோலிக்க மக்களாகிய நாம் நாட்டு நலனையும் நமது இனத்தின் நலனையும் முன் நிறுத்தி சிந்திக்க அழைக்கப்படுகின்றோம்.
எனவே கத்தோலிக்க சமயம் சார்பாக கட்சியாக தேர்தலில் போட்டியிடுவது மன்னார் மறை மாவட்டத்தின் கொள்கை அல்ல என்பதை தெளிவாக கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
இலங்கை நாட்டின் திருத்தூதரான தூய ஜோசப் வாஸ் அடிகளாரின் பரிந்துரை நமக்கு கிடைப்பதாக. நமது மறைமாவட்டத்தின் பாதுகாவலி ஆகிய மடு அன்னை நம்மோடு பிரசன்னமாக இருந்து தாய்க்கூறிய பாசத்தோடு நம்மை வழி நடத்துவார்.என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment