மஹர பள்ளிவாசலுக்குள், புத்தர் சிலை எப்படி வந்தது...?
‘பள்ளிவாசலுக்குள் எங்களைத் தடைசெய்வதற்கு நாங்கள் அடிப்படைவாதிகளோ, பயங்கரவாதிகளோ அல்ல. எங்களது பள்ளிவாசல் மீண்டும் எங்களுக்கு திருப்பித்தரப்பட வேண்டும். எதிர்வரும் ரமழானுக்கு முன்பு நாங்கள் மீண்டும் பள்ளிவாசலில் தொழ வேண்டும்.’ இது மஹர சிறைச்சாலை வளாக ஜும்ஆ பள்ளிவாசல் பரிபாலன சபைத் தலைவர் துவான் மொஹமட் ஹாபிழின் ஆதங்கம்.
100 வருடங்களுக்கும் மேலாக மஹர சிறைச்சாலை வளாகத்தில் இயங்கிவந்த பள்ளிவாசல் தற்போது சிறைச்சாலை அதிகாரிகளின் ஓய்வு அறையாக மாற்றப்பட்டுள்ளது. அங்கு புத்தர் சிலையொன்றும் வைக்கப்பட்டு, சிறைச்சாலை அதிகாரிகள் மதவழிபாடுகளிலும் ஈடுபடுகிறார்கள். ராகம பகுதியில் வாழும் சுமார் 290 குடும்பங்கள் இப்பள்ளிவாசலை பயன்படுத்தி வந்ததாக பள்ளிவாசல் தலைவர் துவான் மொஹமட் ஹாபிழ் தெரிவிக்கிறார்.
இவ்விவகாரம் தொடர்பில் பள்ளிவாசல் நிர்வாகம் ஜனாதிபதி கோத்தாபய ராஜ பக் ஷ, பிரதமரும் கலாசார அமைச்சருமான மஹிந்த ராஜபக் ஷ, நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் ஏ.பி.எம்.அஷரப், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபைத் தலைவர் ரிஸ்வி முப்தி ஆகியோருக்கு முறைப்பாடு செய்துள்ளது.
4/21 தாக்குதலின் பின்பு தடை
ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் பின்பு சிறைச்சாலை அதிகாரிகளால், பள்ளிவாசல் முஸ்லிம்களால் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டது. பாதுகாப்பு காரணங்களின் நிமித்தம் பள்ளிவாசல் தடைசெய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை நிர்வாகம் தெரிவித்தது.
பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து பள்ளிவாசல் தடைசெய்யப்பட்டிருந்தாலும் நிலைமை சீரடைந்த பின்பு, அவசரகாலசட்டம் நீக்கப்பட்டதன் பின்பு பள்ளிவாசல் மத கடமைகளுக்காக திறந்து வைக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் அவ்வாறு திறந்துவிடப்படவில்லை. தொடர்ந்தும் தடை உத்தரவு அமுலிலே இருந்தது. இந்த கால எல்லையிலே பள்ளிவாசல் புனர்நிர்மாணம் செய்து ஓய்வு அறையாக மாற்றப்பட்டுள்ளது.
ஆனால் பள்ளிவாசல் சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் ஓய்வு அறையாக மாற்றப்பட்டமையை நியாயப்படுத்துவதற்காக பள்ளிவாசல் நீண்டகாலமாக கைவிடப்பட்டிருந்ததாலே ஓய்வு அறையாக மாற்றப்பட்டதாக சிறைச்சாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கு ஓய்வு நேரங்களைக் கழிக்க ஓய்வு அறை இல்லாத குறையை தீர்ப ்பதற்காக மேற்கொண்ட தீர்மானம் என்றும் சிறைச்சாலை அதிகாரி ஜகத் சந்தன வீரசிங்கவின் ஆலோசனைக்கு அமைய இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிவாசலின்றி முஸ்லிம்களுக்கு அசெளகரியம்
மஹர சிறைச்சாலை அதிகாரிகள் ஏப்ரல் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்களின் பின்பு சிறைச்சாலை வளாகத்தினுள் இருக்கும் பள்ளிவாசலுக்கு முஸ்லிம்கள் பிரவேசிப்பதற்கு தடைவிதித்தனர். பாதுகாப்பு கருதி முஸ்லிம்களை அங்கு அனுமதிக்க முடியாதென்றும் கூறப்பட்டது. சிறைச்சாலை ஆணையாளர் நாயகமே இந்த உத்தரவினைப் பிறப்பித்திருப்பதாகவும் மஹர சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த ஜும்ஆ பள்ளிவாசலை ராகம பகுதியைச் சேர்ந்த சுமார் 290 முஸ்லிம் குடும்பங்கள் பயன்படுத்தி வந்தன. நூறு வருடங்களுக்கும் மேலாக இப்பள்ளிவாசலில் நாளாந்த ஐவேளை தொழுகை, வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை, பெருநாள் தொழுகைகள், தராவிஹ் தொழுகை மற்றும் ஜனாஸா தொழுகை என்பன நடைபெற்று வந்துள்ளன.
பள்ளிவாசல் முஸ்லிம்களுக்கு தடைசெய்யப்பட்டதன் காரணமாக முஸ்லிம்கள் பல மைல்களுக்கப்பால் இருக்கும் வேறு பள்ளிவாசல்களுக்குச் செல்லும் நிலைமை உருவாகியிருக்கிறது. பள்ளிவாசலில் நடைபெற்று வந்த அஹதியா வகுப்புகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. பள்ளிவாசலுக்குள் பிரவேசிப்பது தடை செய்யப்பட்டுள்ளதால் பள்ளிவாசலை துப்புரவு செய்வதற்கோ, பள்ளிவாசலில் இருக்கும் பொருட்களைப் பயன்படுத்துவதற்கோ இயலாது இப்பகுதி மக்கள் பல்வேறு அசெளகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
ஜனாஸாக்கள் இடம்பெற்ற போது ஜனாஸாக்களை சுமந்து செல்வதற்கான சந்தூக் மற்றும் ஜனாஸாவை குளிப்பாட்டுவதற்கான மேசை போன்றவற்றை பள்ளிவாசலிருந்து பெற்று பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டதால் ஜனாஸா நல்லடக்கத்திலும் அண்மைக்காலமாக இப்பகுதி மக்கள் அசெளகரியங்களை எதிர்கொண்டார்கள்.
அண்மையில் ஐந்து ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய வேண்டியிருந்தது.
இச்சந்தர்ப்பத்தில் சந்தூக் மற்றும் ஜனாஸா குளிப்பாட்டும் மேசை பெற்றுக் கொள்ள முடியாமற் போனதால் இரண்டு ஜனாஸாக்கள் நல்லடக்கத்துக்காக மாபோல மையவாடிக்கே எடுத்துச் செல்லப்பட்டன. பின்பு ஜனாஸாக்கள் நல்லடக்கத்துக்காக வேறு மையவாடிகளுக்கு கொண்டு செல்லப்படக்கூடாது.
மஹர மையவாடியிலே நல்லடக்கம் செய்ய வேண்டுமென மஹர பள்ளிவாசல் நிர்வாகம் தீர்மானித்தது. இந்த மையவாடி மஹர ஜும்ஆ பள்ளிவாசலுக்கு அண்மையிலே அமையப்பெற்றுள்ளது.
இரண்டு ஜனாஸாக்கள் மஹர மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டன. இதற்கென சந்தூக் மற்றும் ஜனாஸாக்கள் குளிப்பாட்டும் மேசை என்பன மாபோலை பள்ளிவாசலிலிருந்தே எடுத்து வரப்பட்டு ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டன. பள்ளிவாசல் முஸ்லிம்களுக்கு தடைசெய்யப்பட்டிருந்ததால் ஜனாஸா தொழுகை ஜனாஸா வீட்டிலேயே நடத்தப்பட்டது. இறுதியாக இப்பகுதியில் நிகழ்த்த ஜனாஸாவின் தொழுகை மையவாடியிலே நடாத்தப்பட்டது.
ஏப்ரல் உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதல்களின் பின்பு இவ்வாறான சவால்களையும் அசெளகரியங்களையுமே இப்பகுதி முஸ்லிம்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. 100 வருடங்களுக்கும் மேற்பட்ட பள்ளிவாசல் ஒன்றுக்கு நேர்ந்த கதியே இது. அரசாங்கம், தேசிய ஒருமைப்பாடு, இன நல்லிணக்கம், மத உரிமைகள், அனைவருக்கும் சமமான நீதி என்றெல்லாம் பட்டியலிட்டு கவர்ச்சியான உறுதிமொழிகள் வழங்கினாலும் களநிலைமை இவ்வாறே அமைந்திருக்கிறது. இந்நிலைமைகளை அரசியல் தலைவர்கள், ஆட்சியாளர்கள் அறியாதிருக்கிறார்களா?
இவற்றுக்கெதிராக அமைச்சரவையில் குரல்கொடுக்க முஸ்லிம் சமூகத்தின் சார்பில் எவரும் இல்லை. முஸ்லிம் அமைச்சர்கள் நியமிக்கப்படாமை ஓர் திட்டமிட்ட செயலாகவே கருத வேண்டியுள்ளது. முஸ்லிம் சமய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சராக பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவே பதவி வகிக்கிறார். அவர் தன்னைச் சூழ பல முஸ்லிம் விவகார ஆலோசகர்களாக பலரை இணைத்துக் கொண்டுள்ளார். ஏன் அவர்கள் இவ்வாறான சந்தர்ப்பத்தில் வாய் மூடி மெளனிகளாக இருக்கிறார்கள் என்பது புரியவில்லை.
முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளில் வாய் திறக்கக் கூடாது என்ற நிபந்தனையில் கீழ் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்களா? இல்லையேல் அவர்கள் வாய்திறக்கப்பயப்படுகிறார்களா? எனும் வினாக்களுக்கு அவர்கள் தான் சமூகத்துக்குப் பதிலளிக்க வேண்டும்.Vidivelli
ஏ.ஆர்.ஏ.பரீல்
வாயிருந்தும் ஊமை
ReplyDeleteகாதிருந்தும் செவிடு
கண்ணிருந்தும் குருடு
This is pohottu ruling .... only the the beginning.... what will happen if 2/3 wi in gen election?
ReplyDeleteAllah is enough for us.
A sabri where is your .....
It should be translated to sinhala too
ReplyDelete