இலங்கையில் 8 ஆவது கொரோனா நோயாளி இனங்காணப்பட்டார்
இந்நாட்டின் 8 வது கொரோனா வைரஸ் (கொவிட் 19) நோயாளி இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
கந்தகாடு கண்காணிப்பு மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நபர்களில் ஒருவக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
42 வயதுடைய நபர் பொலன்னறுவை வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் இத்தாலியில் இருந்து இலங்கை வந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, இன்றைய தினம் மொத்தமாக மூன்று பேருக்கு இதுவரை கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கந்தகாடு கண்காணிப்பு மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவரும் மற்றும் நாத்தான்டிய பிரதேசத்தில் ஒருவரும் இதற்கு முன்னர் இனங்காணப்பட்டிருந்ததாக சுகாதார பணிப்பாளர் நாயகம் தெரிவித்திருந்தார்.
அவர்கள் இருவரும் இத்தாலியில் இருந்து இந்நாட்டுக்கு வருகை தந்தவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
அதேபோல் நேற்று 3 பேருக்கு கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
குறித்த 3 நோயாளர்களில் ஒருவர் 41 வயதுடையவர் எனவும் அவர் ஜேர்மனியில் இருந்து இலங்கைக்கு வருகை தந்தவர் எனவும் ஏனைய 2 நோயாளர்களும் கந்தகாடு கண்காணிப்பு மத்திய நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, இதுவரை 8 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி பொலன்னறுவை மற்றும் கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
Post a Comment