கோரானா நோய் அறிகுறி நபரால் பதற்றம் - 8 பேர் கைது
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு களுவாஞ்சிகுடியில் இருந்து நோயாளியொருவரை கொண்டுவருவதற்கு அப்பகுதியில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக வைத்தியசாலை பகுதியில் பதற்ற நிலமையேற்பட்டுள்ளது.
இன்று 13 களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வந்த 47வயதுடைய ஒருவர் கடும் காய்ச்சல் உள்பட கொரோனாவுக்கான சில நோய் அறிகுறிகள் காணப்பட்டதன் காரணமாக அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கொழும்பில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் கடமையாற்றி விடுமுறையில் போரதீவுப்பற்று திக்கோடைக்கு சென்ற நிலையில் அங்கு காய்ச்சல் ஏற்பட்டதன் காரணமாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைபெறச் சென்றுள்ளார்.
கொழும்பில் உள்ள நட்சத்திர விடுதியில் இவர் சீனர்களுடன் தங்கி இருந்துள்ளதாகவும் அதன் காரணமாக இவரின் நோய் தொடர்பில் மருத்துவர்கள் சந்தேகம் கொண்டதன் காரணமாக குறித்த மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இவர் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உள்ள கொரோனா சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உள்ள கொரோனா சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட முதல் நபராகவும் இவர் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் இருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட அம்பியூலன்ஸை மறித்து வைத்தியசாலையினை சூழவுள்ள பிரதேச மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து அப்பகுதிக்கு சென்ற மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைத்ததுடன் வைத்தியசாலையின் செயற்பாடுகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தியதாக சந்தேகத்தில் 8 பேரை கைது செய்துள்ளனர்.
தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையினை சூழ சிறப்பு அதிரடிப்படையினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளதுடன் அப்பகுதியின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Post a Comment