Header Ads



3 மாதத்திற்கு தேவையான பொருட்கள் எம்மிடமுள்ளது - அரசாங்கம்

(ஆர்.யசி)

மூன்று மாத காலத்திற்கான உணவும் மருந்து பொருட்களும்,  20 நாட்களுக்கான எரிபொருளும் தாராளமாக இருப்பதாகவும் நாட்டு மக்கள் எக்காரணம் கொண்டும் அத்தியாவசிய பொருட்கள் பற்றாகுறை இருப்பதாக அச்சம் கொள்ளத்தேவையில்லை எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுபடுத்தும் வகையில் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மக்கள் கொண்டுள்ள அச்சம் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இதனைக் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

கடந்த சில தினங்களாக மக்கள் கடைகளிலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் கூட்டம் கூட்டமாக நிற்பதை பார்க்க முடிந்தது.

தற்போது ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும் கூட சிலர் அநாவசிய செயற்பாடுகளில் ஈடுபடுவதாக கூறப்படுகின்றது.

எவ்வாறு  இருப்பினும் திங்கட்கிழமை ஊரடங்கு சட்டம் தகர்க்கப்பட்டவுடன் மீண்டும் மக்கள் குழப்பங்களை விளைவிக்கும் வகையில் பொருட்களை வாங்கும் நிலைமையை குறைத்துக்கொள்ள வேண்டும்.

மக்களின் அத்தியாவசியபொருட்களில் எந்த தட்டுப்பாடும் இல்லை. 

அரிசி, பருப்பு மற்றும் ஏனைய அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடுத்த மூன்று மாதகாலத்திற்கு ஏற்ற வகையில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மருந்துகளும் சிறுவர்களுக்கான மா போன்றவையும் தாரளமாக உள்ளது. அதேபோல் அடுத்த 20 நாட்களுக்கான எரிபொருள் தாரளமாக உள்ளது. அடுத்த மூன்று நாட்களில் இரண்டு எரிபொருள் கப்பல்கள் இலங்கைக்கு வருகின்றது. எனவே மக்களின் அன்றாட வாழ்கையில் எந்த சிக்கல்களும் வராது என்பதை பொறுப்புடன் அறிவிப்பதாக அவர் கூறினார்.

No comments

Powered by Blogger.