Header Ads



இலங்கைக்கு,, சீன ஜனாதிபதியின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி!

(நா.தனுஜா)

சீனாவிற்கும், இலங்கைக்கும் இடையிலான நல்லுறவிற்கு அதிக முக்கியத்துவமளிக்கும் அதேவேளை, இருநாடுகளினதும் பரஸ்பர அரசியல் நலன்களை அடைந்துகொள்வதற்கு இலங்கையுடன் இணைந்து செயலாற்றுவதற்கும் விரும்புவதாக சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் தெரிவித்திருக்கிறார்.

இலங்கையின் 72 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிற்கு அனுப்பிவைத்திருக்கும் வாழ்த்துக் கடிதத்திலேயே சீன ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார். அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 72 ஆவது சுதந்திர தினத்தில் சீன அரசாங்கத்தினதும், மக்களினதும் சார்பில் இலங்கைக்கும் அதன் மக்களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையில் பரஸ்பர புரிந்துணர்வு, நம்பிக்கை மற்றும் ஆதரவு என்பவற்றின் அடிப்படையில் மிகநீண்டகாலமாக நட்புறவு பேணப்பட்டு வருகின்றது. தற்போது இருநாடுகளுக்கும் இடையிலான நல்லுறவு புதிய பரிமாணமொன்றை எட்டியிருப்பதுடன், இருநாடுகளும் புதிய வாய்ப்புக்களையும் எதிர்கொண்டுள்ளன.

இருநாடுகளுக்கும் இடையிலான நல்லுறவிற்கு நாம் அதிக முக்கியத்துவமளிக்கும் அதேவேளை, இருதரப்பினதும் பரஸ்பர அரசியல் நலன்களை அடைந்துகொள்வதற்கு இலங்கையுடன் இணைந்து செயலாற்றுவதற்கும் விரும்புகின்றோம்.

பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்புக்களை ஆழமாக்கல், இருநாட்டு மக்களுக்கும் இடையிலான பரிமாற்றங்களை மேம்படுத்தல், சீனா - இலங்கை ஆகியவற்றுக்கு இடையிலான ஒத்துழைப்பில் புதிய அத்தியாயமொன்றை ஆரம்பித்தல் ஆகியவற்றிலும் நாம் கவனம் செலுத்தியிருக்கிறோம்.

இலங்கை செழிப்படைவதற்கும், இலங்கை மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கும் எமது வாழ்த்துக்களைக் கூறிக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.