Header Ads



அன்னத்தை சின்னமாக்குவதில், சட்ட சிக்கல்

(செ.தேன்மொழி)

பொதுக் கூட்டணியின் சின்னமாக அன்னத்தை அறிவிக்க முடியாது என்றும் , அதனால் சட்ட சிக்கல் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ள சுயாதீன தேர்தல்கள் ஆணையகம் , இவ்வாறு அன்னம் சின்னத்தை அறிவித்தால் மீண்டும் 5 வருடங்களுக்கு அதில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என்றும் சுட்டிக்காட்டியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

சின்னம் குறித்து உறுப்பினர்கள் மத்தியில் இணக்கப்பாடு எட்டப்பட்ட நிலையில்  சட்ட திட்டங்கள்  தொடர்பில் ஐ.தே.க.வின் பொதுச் செயலாளர் அக்கிலவிராஜ் காரியவசம் , பொதுக் கூட்டணியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் பாராளுமன்ற உறுப்பினரான ரவி கருணாநாயக்க ஆகியோர் தேர்தல்கள் ஆணையகத்தில் இன்று கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தனர்.

இது குறித்து தெளிவுப்படுத்தும் போதே அகில விராஜ்காரியவசம்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதேவேளை  ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற செயற்குழு கூட்டத்தை அடுத்து , ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஐ.தே.க. உறுப்பினர்கள் கூறியதாவது,

அக்கிலவிராஜ் காரிய வசம்

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையிலான சமகி ஜனபலவேகய என்ற பொதுக் கூட்டணியுடன் இணைந்து பொதுத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது சின்னம்  தொடர்பில் பல்வேறு கருத்து முரண்பாடுகள் இடம்பெற்று வந்த நிலையில் அன்னமே சின்னமாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. சின்னம் தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக நியமிக்கப்பட்ட 10 பேர் அடங்கிய குழுவினரும் இதனை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் அன்னம் சின்னத்தை பரிந்துரைப்பதால் ஏற்படும் சட்டசிக்கல்கள் தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளரிடமும் , சட்டமா அதிபரிடமும் கலந்துரையாடி அவர்களின் ஆலோசனைகளுக்கமைய செயற்பட உள்ளோம் என அவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.