செயற்குழுக் கூட்டத்தில் நடந்தது என்ன
எதிர்வரும் பொதுத்தேர்தலில் அன்னம் சின்னத்தில் போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அணியினரும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான அணியினரும் இணங்கியிருந்தபோதிலும் அதற்கு செயற்குழுக் கூட்டத்தில் நேற்று அங்கீகாரம் வழங்கப்படவில்லை.
சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி அரசியல் கூட்டணிக்கு அன்னம் சின்னத்தை வழங்குவது தொடர்பில் தேர்தல் திணைக்களத்தின் ஆலோசனையினை முதலில் பெறவேண்டும் என்றும் அதன் பின்னர் இதற்கான அங்கீகாரத்தை வழங்கலாம் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நேற்று கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நடைபெற்றது. காலை 10 மணி முதல் 11.30மணிவரை நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பொதுத் தேர்தலை அன்னம் சின்னத்தில் சந்திப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இதன்போது அன்னம் சின்னத்தில் பொதுத்தேர்தலை சந்திக்கலாம் என்று சஜித் அணியைச் சேர்ந்த பல உறுப்பினர்களும் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். ஆனால் ரணில் அணியைச் சேர்ந்த உறுப்பினர்கள் யானைச் சின்னத்தில் தேர்தலை சந்திப்பதே சிறந்தது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
எம்பி.க்களான நவின் திசாநாயக்க. தயா கமகே. ருவன் விஜயவர்தன. பாலித ரங்கே பண்டார உட்பட பலரும் இத்தகைய கருத்துகளை தெரிவித்துள்ளனர். பொதுக் கூட்டணியாக அன்னச் சின்னத்தில் போட்டியிட்டாலும் நுவரெலியா மாவட்டத்தில் யானைச் சின்னத்திலேயே போட்டியிடவேண்டுமென்று நவின் திசாநாயக்க எம்.பி. யோசனை முன்வைத்துள்ளார். இதேபோன்று அம்பாறையில் யானைச் சின்னத்திலேயே போட்டியிடவேண்டுமென தயா கமகே எம்.பி. வலி।யுறுத்தியுள்ளார்.
இங்கு கருத்து தெரிவித்த ருவன் விஜயவர்தன எம்.பி. தொடர்ச்சியாக நாம் யானைச் சின்னத்திலேயே களமிறங்கி வருகிறோம். தேர்தல் நெருங்குவதால் எந்தச் சின்னத்தில் போட்டியிடுவது என்பதில் உடனடியாக தீர்மானம் எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
எம்.பி.க்களான ரவிந்திர சமரவீர, திலிப் ஆராய்ச்சி உட்பட பலரும் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் செயற்பாட்டை விமர்சித்ததுடன் சின்னம் தொடர்பில் உடனடி தீர்மானம் எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
இதனையடுத்து புதிய கூட்டணி அன்னம் சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் ஆலோசனை பெறப்பட வேண்டும். அந்த ஆலோசனையைப் பெற்றுக்கொண்ட பின்னர் அடுத்த செயற்குழுக் கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என்று கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். இதனையடுத்து கூட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
Post a Comment