எமக்கான தேசம் இதுவல்ல, என்ற உணர்வு மேலெழுகின்றது - சிறிதரன்
(ஆர்.யசி)
தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடுவதை அரசாங்கமே புறக்கணித்ததன் மூலமாக எமக்கான தேசம் இதுவல்ல, எமக்கான தேசியக்கொடி இதுவல்ல என்ற உணர்வு தமிழர்களான எம்மத்தியில் எழுகின்றது. ஒரு தேசத்தில், ஒரு தேசிய கொடியில் தமிழர்களை இன்னமும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை சிங்கள பேரினவாத தலைமைகள் வெளிக்காட்டி விட்டன என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
சுதந்திர தினத்தில் சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் இசைக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளமை தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டார்.
அவர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்,
தமிழ் மக்கள் இந்நாட்டில் புறக்கணிகப்பட்ட மக்கள் என்பதை சிங்கள தரப்பினர் பல்வேறு செயற்பாடுகளில் வெளிப்படுத்தியுள்ளனர்.
யுத்தத்திற்கு முன்னரும் சரி யுத்த காலகட்டத்திலும் யுத்தம் முடிவுக்கு வந்து பத்து ஆண்டுகள் கடந்தும் சரி சிங்கள தரப்புகள் தமது மனங்களில் இதனை கனமாக வைத்துக் கொண்டு பயணிக்கின்றனர். இந்தநாடு தமிழர்களுக்கு அல்ல என சிங்கள பேரினவாத சக்திகளே கூறிக்கொண்டுள்ளன. அதன் ஒரு வெளிப்பாடே இப்போது புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழர்களின் உரிமையை பறிக்கும் விதத்தில் முன்வைக்கப்பட்டுள்ள தமிழ் மொழி தேசியகீத புறக்கணிப்பாகும்.
தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடுவதற்கு அரசாங்கம் மறுப்பு தெரிவிக்கின்றது என்பது தமிழர்கள் இன்னமும் இந்த நாட்டின் பிரஜைகள் இல்லை என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்வதாகவே அமைகின்றது. ஒரு தேசம், ஒரு தேசியக்ெகாடி என்ற ஒருமித்த உணர்வுகளை ஏற்படுத்த சிங்கள தலைமைகள் தயாராக இல்லை என்பதை அவர்கள் தெளிவாகக் கூறி வருகின்றனர். இந்த நாட்டினை புறக்கணிக்க தமிழர்கள் எந்த செயற்பாடுகளையும் செய்யவில்லை, ஆரம்பம் முதற்கொண்டு சிங்கள தலைவர்களே இந்த நாட்டில் தமிழர்கள் புறக்கணிக்கப்பட வேண்டும் என்ற வகையில் சில செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது வருத்தமளிக்கக் கூடிய விடயமாகும்.
சிங்கள தலைமைகளே இவ்வாறு நடந்துகொள்ளும் நிலையில் தமிழர்கள் இது குறித்து சிந்தித்து வேதனைப்பட வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வியும் எம்மத்தியில் எழுகின்றது. எமக்கான தேசம் இதுவல்ல, எமக்கான தேசியக்கொடி இலங்கைக் கொடி அல்ல என்ற உணர்வு எம்மத்தியில் எழுகின்றது.
இன்னமும் இந்த நாட்டின் தேசிய கொடியில் ஒருமித்த உணர்வு ஏற்படவில்லை என்பதே உண்மையாகும். தமிழ் மக்களுக்கு இன்னமும் இந்த நாட்டில் அங்கீகாரம் கிடைக்க வில்லை, தமிழர்கள் சுய உரிமைகள் கிடைக்கவில்லை என்பதை புதிய அரசாங்கம் தெளிவாக உணர்த்திவிட்டது என்றார்.
Post a Comment