Header Ads



கொரோனா - 2800 பேர் பலி

பல்வேறு ஐரோப்பிய நாடுகள், தங்கள் நாடுகளில் கொரோனா தொற்று இருப்பதாக முதன்முறையாக அறிவித்துள்ளன. 

கொரோனா தொற்றால் உலகளாவிய ரீதியில் இதுவரை 2800 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 82,164 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

ஆஸ்திரியா, குரேஷியா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் இத்தாலிக்கு சென்று வந்தவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

லத்தீன் அமெரிக்க நாடுகளில் பிரேசிலில், இத்தாலிக்கு சென்று திரும்பிய ஒருவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

ஐரோப்பிய நாடுகளில் இத்தாலியில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இத்தாலியில் இதுவரை 300 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 பேர் உயிரிழந்துள்ளனர். 

ஆஸ்திரியாவில், இன்ஸ்ப்ரக் நகரில் இளம் இத்தாலிய தம்பதியினருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அவர்கள் பணிபுரிந்த விடுதி மூடப்பட்டுள்ளது. 

சுவிட்சர்லாந்தில், 70 களில் இருக்கும் முதியவர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டு தனிமையில் வைக்கப்பட்டுள்ளார். 

குரேஷியாவில் இத்தாலியிலிருந்து திரும்பிவந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

ஸ்பெயினின் டெனிரிஃப் பகுதியில், ஒரு விடுதியில் தங்கியிருந்த மருத்துவர் மற்றும் அவரின் மனைவிக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதால் அந்த விடுதியில் இருந்த சுமார் 1000 பேரை பூட்டி வைத்துள்ளனர். 

பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியிலும் இத்தாலிக்கு சென்று திரும்பி வந்தவர்கள் சிலருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கூறப்பட்டுள்ளது. 

அல்ஜீரிய சுகாதாரத்துறை அமைச்சர் அந்நாட்டில் முதல் கொரோனா தொற்று குறித்து அரசு தொலைக்காட்சியில் தெரிவித்தார். 

மேலும் பாதிக்கப்பட்டவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட இரண்டாவது நாடு அல்ஜீரியாவாகும். 

ஆப்ரிக்க நாடுகளில், எகிப்தில்தான் முதன்முறையாக வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் பாதிக்கப்பட்டவர் தற்போது குணமாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா தொற்று பரவல் "தவிர்க்க முடியாத" நிலையில் உள்ளதால் அமெரிக்க மக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அந்நாட்டின் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

அமெரிக்காவில் 53 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இதற்காக அவசரமாக நிதி ஒதுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை வைத்துள்ளனர். 

புதன்கிழமையன்று தென் கொரியாவில் உள்ள அமெரிக்க ராணுவதலத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. 

அந்த 23 வயது சிப்பாய் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். 

ஆனால் அமெரிக்காவில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார். 

அமெரிக்காவில் இதுவரை 14 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.