Header Ads



தலைமை பதவி சஜித்ற்கு வழங்கப்படாவிட்டால், மாற்று வழி தேர்ந்தெடுக்கப்படும்

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை பதவி சஜித் பிரேமதாசவிற்கு வழங்கப்படாவிட்டால் அவரின் குழுவினர் மாற்று வழியை தேர்ந்தெடுப்பர் என்று ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்றைய நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் கட்சித் தலைமையை ஒப்படைப்பதில் கட்சியின் நாடாளுமன்றக் குழு முடிவு செய்யத் தவறினால், சஜித் மற்றும் அவருக்கு ஆதரவான மற்றும் பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாற்று வழியைப் பற்றி சிந்திக்க நிர்பந்திக்கப்படுவார்கள்.

ஐக்கிய தேசிய கட்சியின் மூத்த உறுப்பினர்கள், கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்களின் கோரிக்கைக்கு தலைவணங்குவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

சஜித்தின் தலைமையின் கீழ் கட்சி எதிர்வரும் பொதுத் தேர்தலில் அதிக எண்ணிக்கையிலான இடங்களை வெல்ல கூடிய வாய்ப்புக்கள் உள்ளதாக நம்புகிறேன்.

பொதுத் தேர்தலில் சஜித்தின் தலைமையில் கட்சி வெற்றி பெற்றால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கும் இடையில் வேறுபாடுகள் வளர்ந்து வரும் சூழ்நிலையில் ஜனாதிபதியின் புதிய அபிவிருத்தித் திட்டத்தை முன்னெடுப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சி ஆதரவளிக்க முடியும்.

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சபாநாயகர் கரு ஜயசூரியவை பொது வேட்பாளராக நிறுத்தியிருந்தால் ஐக்கிய தேசிய கட்சி இன்று இந்த கதியை அனுபவித்திருக்க வேண்டிய தேவை இருந்திருக்காது, என்று கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.