மைத்திரி - சஜித் மீது பாராளுமன்றத்தில் நாமல் குற்றச்சாட்டு
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது சொந்த மாவட்டமான பொலநறுவையில் எவ்வித அபிவிருத்திப் பணிகளையும் மேற்கொள்ளவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சம் சாட்டியுள்ளார்.
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போதே அவர் இக்குற்றச்சாட்டை முன்வைத்தார்.
இதன்போது உரையாற்றிய அவர்,
“நாட்டில் பொருளாதாரத்தையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதே எமது நோக்கம். மாறாக அரசியல் பழிவாங்கலை செய்ய வேண்டிய அவசியம் எமக்கு இல்லை.
எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் சஜித் பிரேமதாசவின் மாவட்டமான ஹம்பாந்தோட்டையில் எந்தவித அபிவிருத்திப் பணிகளையும் மேற்கொள்ளவில்லை. அவரது சொந்த மாவட்டத்திலேயே அபிவிருத்தி பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தில் மோசடிகள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக ஹம்பாந்தோட்டை துறைமுக விவகாரம் தொடர்பாக ஆராய்வதற்கு குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது சொந்த மாவட்டமான பொலநறுவையில் எவ்வித அபிவிருத்திப் பணிகளையும் மேற்கொள்ளவில்லை. குறிப்பாக அந்த மாவட்டத்தில் இடம்பெற்ற அபிவிருத்திப் பணிகள் நூற்றுக்கு பூஜ்ஜியமாகும்.
எனவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் 100 நாள் அரசாங்கம் இல்லை. எமது அரசாங்கம் 5 ஆண்டு திட்டங்களுடன் ஆட்சிக்கு வந்துள்ளது. அதனை நடைமுறைப்படுத்துவதே எதிர்கால இலக்காகும்.
எமது திட்டங்களுக்கு எதிர்ப்பினை வெளியிடாமல் ஆதரவினை வழங்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
Post a Comment