மருதானையில் கைக்குண்டு மீட்பு, சம்மாந்துறையில் துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது
(செ.தேன்மொழி)
மருதானை பகுதி ஓடை ஒன்றிற்கருகில் கைவிடப்பட்ட நிலையில் கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது.
மருதானை - ஒராபிபாஷா மாவத்தை பகுதியில் ஓடை ஒன்றுக்கருகில் இன்று பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது கைக்குண்டு மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பழைமையான கைக்குண்டு ஒன்றே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதுடன் , இதனை யார் இந்த பகுதியில் விட்டுச் சென்றிருப்பார் என்பது தொடர்பில் இதுவரையில் தகவல்கள் கிடைக்கப் பெறவில்லை.
இந்நிலையில் மருதானை பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
2
- பாறுக் ஷிஹான் -
காணி ஒன்றில் புதைக்கபட்டு கைவிடப்பட்டிருந்த நிலையில் ரீ-56 ரக துப்பாக்கி ஒன்று சம்மாந்துறை பகுதியில் மீட்கப்பட்டுள்ளது.
விசேட அதிரடிப்படையினரின் புலனாய்வு பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய செவ்வாய்க்கிழமை(21) மாலை சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மலையடிவாரம் பகுதியில் இருந்து குறித்த துப்பாக்கியை மீட்ட விசேட அதிரடிப்படையினரால் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இவ்வாறு உர பையினுள் சுற்றப்பட்ட நிலையில் மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த குறித்த துப்பாக்கி இயங்கு நிலையில் இல்லை எனவும் குறிப்பிட்ட துப்பாக்கியுடன் இரு ரவைக்கூடுகளும் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment