52 வழக்குகளை எதிர்கொண்டுள்ள பசறை, பஸ் விபத்தின் சாரதி
(எம்.எப்.எம்.பஸீர்)
பதுளை, பசறை – மடுல்சீமை பிரதான வீதியின் ஆறாம் கட்டைப்பகுதியில் ஒன்பது பேரின் உயிரைப் பறித்து மேலும் 40 பேருக்கு காயமேற்படுத்திய சம்பவத்தில், இலங்கை போக்குவரத்து சபை பஸ் வண்டியின் சாரதிக்கு எதிராக 52 வழக்குகளை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பில் உரிய ஆலோசனைகள் மடுல்சீமை பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் பதுளை பொலிஸ் அத்தியட்சர் வசந்த கந்தேவத்த தெரிவித்தார்.
இந்த விபத்து தொடர்பில் குறித்த பஸ் வண்டியை செலுத்திய சாரதியான விஜேசிங்க முதியன்சலாகே சாந்தகுமார என்பவர் ஏற்கனவே மடுல்சீமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே அவருக்கு எதிராக 52 வழக்குகளை தாக்கல் செய்ய பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
இதனைவிட, குறித்த பஸ் வண்டி விபத்துக்கு உள்ளாகும்போது, அந்த பஸ் வண்டியின் வருமான அனுமதிப் பத்திரம் இருக்கவில்லை எனவும் அது தொடர்பில் பதுளை இலங்கை போக்குவரத்து சபை டிப்போ அத்தியட்சருக்கு எதிராக வழக்கு தொடரவும் பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
இந்த வழக்குகளில் பாதுகாப்பற்ற வாகன செலுத்தல், விபத்தொன்றினை தடுக்காமை, உயிரிழப்புக்களை ஏற்படுத்தியமை, படுகாயங்களை விளைவித்தமை போன்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படவுள்ளதாகவும் அந்த அதிகாரி கூறினார்.
இதற்கான ஆலோசனைகள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ள நிலையில் அரச சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கைகளை மையப்படுத்தி குறித்த வழக்குகள் தாக் கல் செய்யப்படவுள்ளன.,
Post a Comment