இலங்கை முஸ்லிம்களுக்கு மறக்கமுடியாத, வரலாற்றை விட்டுச்செல்லும் 2019
2019 ஆம் ஆண்டு எம்மிடமிருந்து விடை பெற்றது. இலங்கை முஸ்லிம்களாகிய நாம் நூற்றாண்டு காலமாக பெரும்பான்மைச் சமூகத்துடனும், ஏனைய சகோதர இனங்களுடனும் ஒற்றுமையாக, நல்லிணக்கத்துடனும் உறவாடியிருக்கிறோம். ஒன்றாக வாழ்ந்திருக்கிறோம். வரலாறு இதற்குச்சான்றாகும்.
ஆனால் எம்மை விட்டு விடைபெற்றுச் செல்லவுள்ள 2019 ஆம் ஆண்டு எமது வரலாற்றில் கறைபடிந்த ஓர் ஆண்டாகும். இலங்கை முஸ்லிம் சமூகம் என்றுமே எதிர்பார்த்திராத அவலங்கள் அரங்கேறிய ஆண்டாகும்.
ஏப்ரல் 21 இல் மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் இலங்கை முஸ்லிம்களின் நற்பெயருக்கு இங்கு மாத்திரமல்ல சர்வதேசத்திலும் களங்கத்தை ஏற்படுத்திவிட்டது. இத்தாக்குதல் இஸ்லாத்தில் அனுமதிக்கப்படாதது எமது சமூகத்தைச் சேர்ந்த ஒரு சிறிய குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலின் அவலங்கள் எண்ணிலடங்காதவை.
250 க்கும் மேற்பட்ட அப்பாவிகளான எமது சகோதர இனத்தவர்கள் பலியெடுக்கப்பட்டார்கள். நூற்றுக்கணக்கானவர்கள் காயங்களுக்குள்ளானார்கள். சிலர் நிரந்தர உடல் உபாதைகளுக்குள்ளாகியுள்ளார்கள்.
இத்தாக்குதலை மேற்கொண்டவர்கள் ஒரு சிறிய குழுவினர் என்றாலும் முழு முஸ்லிம் சமூகமும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. சந்தேகத்துக்குரிய சமூகமாக நாம் மாற்றப்பட்டுள்ளோம். எமது இளைஞர்கள் பலர் இன்றும் சிறைக்கம்பிகளை எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மீதான விசாரணைகள் தொடர்ந்த வண்ணமுள்ளன.
முஸ்லிம் அரசியல் தலைமைகள் கூட இத்தாக்குதலின் பின்னணியில் இருந்து செயற்பட்டதாக பொய்யான குற்றச்சாட்டுகள் இனவாதிகளால் சுமத்தப்பட்டுள்ளன. குண்டுத் தாக்குதலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் முஸ்லிம் சமூகம் கோடிக்கணக்கான நிதியுதவிகளைச் செய்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளும் நிதியுதவிகள் வழங்கியுள்ளன. என்றாலும் இனவாதிகளின் தொடராக குற்றச்சாட்டுகளால் அனைத்தும் மழுங்கடிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான சூழலில் முஸ்லிம் சமூகம் பாதிக்கப்பட்டுள்ள சமூகத்தினதும், பெரும்பான்மைச் சமூகத்தினதும் நல்லெண்ணத்தைக் கவரவேண்டும். அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை, சமூகத்தின் புத்தி ஜீவிகள், சிவில் சமூக அமைப்புகள் இதற்காக களத்தில் இறங்கவேண்டும்.
பெரும்பான்மைச் சமூகம் எம்மீது கொண்டுள்ள சந்தேகங்களைக் களைவதன் மூலமே இந்நாட்டில் எம்மால் சகவாழ்வு வாழமுடியும். சந்தேகங்கள் எமது அயலவர்களைக்கூட அப்புறப்படுத்திவிடும் என்பதை நாம் கவனத்திற்கொள்ள வேண்டும்.
ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அடுத்து முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதிகளால் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்செயல்கள் எமது வர்த்தகத்தைப் பாதிக்கச்செய்தது. சுமார் 30 பள்ளிவாசல்கள் சேதங்களுக்குள்ளாக்கப்பட்டன. குர்ஆன் பிரதிகள் எரிக்கப்பட்டன. இவற்றை நாம் மறந்துவிடவில்லை. இவ்வாறான சோதனைகளின் போதெல்லாம் நாம் பொறுமை காத்திருக்கிறோம். இறைவனிடம் கையேந்தியிருக்கிறோம்.
நாம் தீவிரவாதிகளல்ல, நாம் வன்முறையாளர்கள் அல்ல, இஸ்லாம் வன்முறைகளை எதிர்க்கிறது என்பதை மாற்றுச் சமூகங்களுக்கு நிரூபிக்க வேண்டும். இதனை எமது செயல்கள், எமது நண்பர்கள், எமது உறவாடல்களே நிரூபிக்க முடியும்.
எமது வரலாற்றில் படிந்த கறைகளை 2019 ஆம் ஆண்டுடன் திருப்பி யனுப்பி மலரவுள்ள புத்தாண்டை இஸ்லாம் போதித்துள்ள கருணை, அன்பு, சகோதரத்துவத்துடன் வரவேற்கவேண்டும்.
எமது ஒவ்வோர் குடும்பமும், எம்மை அண்மித்து வாழும் மாற்றுமத குடும்பங்களுடன் சகோதர வாஞ்சையுடன் கைகோர்ப்பதன் மூலம் புத்தாண்டில் நிச்சயம் மாற்றங்களை ஏற்படுத்தலாம். நாட்டில் எமது சமூகத்தின் மீதான சந்தேகங்களைக் களைந்து அனைத்து மக்களுடனும் இணைந்து வாழ்வதற்கும் நாட்டின் அபிவிருத்திக்கும் திடசங்கற்பம் பூணுவோமாக.-Vidivelli
really to see this bad thing happened to Muslim community. So many questions have not been answered about this incident. due to some fanatics, entire Muslim community has to pay the price.. is it due to wrong teaching of Islam? what about Islamic groups. Who indoctrinate them? why? is this took place due to weak political leadership of Muslim community? so many questions we should ask about it.. who is behind it all? why Muslim community at this time?
ReplyDelete