முஸ்லிம்கள் பிழையான எண்ணங்களில் இருந்து, விடுபட்டு எங்களுடன் இணைய வேண்டும்
முஸ்லிம் மக்கள் தவறான எண்ணங்களில் இருந்து விடுபட்டு, எதிர்வரும் தேர்தலில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட முன்வரவேண்டும். இன நல்லிணக்கம் மதங்களுக்கிடையிலான சகவாழ்வு இல்லாமல் நாடொன்றை கட்டியெழுப்ப முடியாது. அதனால் தமிழ், முஸ்லிம் மக்கள் அரசாங்கத்துடன் கைகோர்த்துக்கொள்ள வேண்டும் என நீதி, மனித உரிமைகள், சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
பதுளை வெலிமடை பிரதேசத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே யே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக் ஷ வெற்றிபெற்ற பின்னர் அவரின் முதலாவது உரையின்போது, எனது வெற்றியின் பங்காளியாகுமாறு நான் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தேன். என்றாலும் அவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஆதரவளிக்கவில்லை. அதனால் தற்போதாவது எம்முடன் இணைந்து செயற்படுமாறு அழைப்புவிடுக்கின்றேன் என குறிப்பிட்டிருந்தார். ஜனாதிபதி தேர்தல் பெறுபேறுகளின் பிரகாரம் எங்களுக்கு 120 ஆசனங்கள்வரை பெற்றுக்கொள்ள முடியும்.
அதனால் முஸ்லிம் மக்கள் மீண்டும் சிந்திப்பதற்கான வாய்ப்பு கிட்டியுள்ளது. உங்களது உள்ளங்களை உங்கள் தலைவர்கள் மாசுபடுத்தியுள்ளனர். கோத்தபாய ராஜபக் ஷ அதிகாரத்துக்கு வந்தால் முஸ்லிம்களுக்கு நெருக்கடிகள் ஏற்படும் என அவர்கள் உங்களிடம் தெரிவித்திருந்தனர். என்றாலும் அவ்வாறு எதுவும் இடம்பெறப்போவதில்லை. இந்த அரசாங்கம் சிங்கள பெளத்த மக்களுக்கு போன்று தமிழ்–முஸ்லிம் மக்களதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும். மீண்டும் நாட்டில் குண்டு வெடிக்கப்போவதில்லை.
அத்துடன் நாட்டில் முஸ்லிம் மக்களே அதிகம் வியாபாரம் செய்கின்றனர். தற்போது அரசாங்கம் வற் வரியை குறைத்துள்ளது. அதன் நன்மைகள் அனைத்து மக்களுக்கும் கிடைக்கப்பெறும். அதனால் முஸ்லிம்கள் பிழையான எண்ணங்களில் இருந்து விடுபட்டு, எதிர்வரும் தேர்தலில் எங்களுடன் இணைந்து செயற்பட முன்வரவேண்டும்.
நாட்டில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் மற்றும் மத சகவாழ்வு அத்தியாவசியமாகும். இன நல்லிணக்கம் மதங்களுக்கிடையிலான சகவாழ்வு இல்லாமல் நாடொன்றைக் கட்டியெழுப்ப முடியாது. அதனால் இன மற்றும் மத நல்லிணக்கத்தை நடைமுறையில் காட்டவேண்டும். அதற்கு தமிழ், முஸ்லிம் மக்கள் இந்த அரசாங் கத்துடன் இணைந்துகொள்ள முன்வர வேண்டும் என்றார்.
(எம்.ஆர்.எம்.வஸீம்)
Post a Comment