குத்துச்சண்டையில் முதலிடங்களை குவித்த, மாணவி சடலமாக மீட்பு
வவுனியா கொக்குவெளிப்பகுதியில் கிணற்றிலிருந்து யுவதி ஒருவரின் சடலம் நேற்று (29) மீட்கப்பட்டுள்ளது.
குறித்த யுவதி வீட்டில் தனிமையில் இருந்த நிலையில், வீட்டுக்கு வந்த அவரது உறவினர்கள் நீண்ட நேரமாகியும் யுவதியை காணாத நிலையில் தேடியுள்ளனர்.
நீண்ட நேரம் தேடியும் யுவதி கிடைக்காமையினால் சந்தேகம் கொண்ட அவர்கள் இளைஞர்களின் உதவியுடன் வீட்டின் கிணற்றுக்குள் தேடுதல் நடத்தியுள்ளனர்.
இதன்போது குறித்த யுவதி நீரில் மூழ்கி சடலமாக கிடந்தமை கண்டறியப்பட்டது.
குறித்த சம்பவத்தில் வவுனியா கொக்குவெளி பகுதியை சேர்ந்த 19 வயது பெண்ணே உயிரிழந்துள்ளார்.
வவுனியா பகுதியில் உள்ள பாடசாலையில் கல்வி கற்று வரும் குறித்த பெண் அண்மையில் இடம்பெற்ற குத்துச்சண்டை போட்டியில் அகில இலங்கை ரீதியில் முதல் நிலை இடங்களையும் பெற்றுள்ளார்.
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
-க. அகரன்
Post a Comment