"காட்டுமிராண்டித்தன IS கொலையாளிகள் இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை"
மேற்கு ஆபிரிக்க நாடான நைஜீரியாவில் 11பேர் தீவிரவாதிகளால் கொன்று குவிக்கப்பட்ட விவகாரம் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தலைவர் அபூபக்கர் அல்பாக்தாதி கொல்லப்பட்டதற்கான பழிவாங்கல் என ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் கிளைக் குழு அறிவித்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை வெளியாகிய காணொளி ஒன்றில் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டும் மற்றையவர்கள் 10 பேரும் தலை துண்டிக்கப்பட்டும் கொல்லப்படுவதாக காட்சிகள் அமைந்திருந்தன. இவர்கள் நைஜீரியாவின் வடகிழக்கு மாநிலமான போர்னோவில் உள்ள மைடுகுரி மற்றும் டமதுரு ஆகிய இடங்களிலிருந்து சிறைபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந் நிலையில் இச்சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதால் இதற்கு நைஜீரிய ஜனாதிபதி முஹம்மது புஹாரி கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள கண்டன செய்தியில்,
'நைஜீரிய மக்கள் தங்களை மத அடிப்படையில் பிரிக்க வேண்டாம். எந்த சூழ்நிலையிலும் பயங்கரவாதிகள் கிறிஸ்தவர்களை முஸ்லிம்களுக்கு எதிராக திருப்புவதன் மூலம் எங்களை பிளவுபடுத்தக்கூடாது. ஏனென்றால் இந்த காட்டுமிராண்டித்தனமான கொலையாளிகள் இஸ்லாத்தையும் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான பிற சட்டத்தை மதிக்கும் முஸ்லிம்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை' என குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஒக்டோபர் மாதம் அமெரிக்க படையினர் மேற்கொண்ட விசேட தாக்குதலில் சிரியாவின் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபூக்கர் அல்பாக்தாதி மற்றும் அபுல்-ஹசன் அல் முஹாஜிர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment