Header Ads



மட்டக்களப்பில் பௌத்த பிக்கு மீது, இளைஞர் குழு கடும் தாக்குதல்

மட்டக்களப்பில் பௌத்த பிக்கு ஒருவர் மீது இளைஞர் குழுவொன்று கடுமையான தாக்குதல் மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் பாதிப்படைத்த பிக்கு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

நேற்றிரவு இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக சிங்கள இளைஞர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு எல்லையிலுள்ள ஓமாடியாமடு கிராமத்தில் உள்ள சுதுகல ஆரன்ய சேனாச்சனிய விகாரையின் பௌத்த மதகுருவான சுபத்தாலங்காரம கிமி என்பவரே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

குறித்த மூன்று இளைஞர்கள் நேற்று இரவு மது அருந்திவிட்டு விகாரைக்குள் பிரவேசித்துள்ளனர். அவர்களை தடுத்து நிறுத்தியமையாலேயே குறித்த பிக்கு மீது பொல்லால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாக்குதலில் படுகாயமடைந்த மதகுரு நடமாட முடியாத நிலையில், பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், பிக்குவை மீட்டு, வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் அயலூர்வாசிகள் என்றும் அவர்களை தன்னால் அடையாளம் காட்டமுடியும் என்றும் பிக்கு தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.