Header Ads



தமிழ்மொழி பேசும் மக்கள் அதிர்ச்சி - ஜனாதிபதிக்கு மனோ அவசர கடிதம்

எதிர்வரும் சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படாது என துறைசார் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் அறிவித்துள்ளதாக வெளியாகியுள்ள செய்தி, இலங்கை வாழ் தமிழ் மொழி பேசும் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. 

இத்தகைய முடிவு, இலங்கையின் அரசியலமைப்பில் இணை ஆட்சி மொழியாகவும், இணை தேசிய மொழியாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள தமிழ் மொழியை புறந்தள்ளி இலங்கையை மொழி இனரீதியாக பிரிக்கும் ஒரு பிரிவினைவாத செயல் என்பதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். 

உங்கள் பதவியேற்பு நிகழ்வின் ‘அனைத்து இலங்கையர்களுக்குமான ஜனாதிபதியாக செயற்படுவேன்’ என்று நீங்கள் நாட்டுக்கு தந்த உங்கள் உறுதிமொழியின் அடிப்படையில் தமிழ் மொழியிலான தேசிய கீதத்தை அகற்றும் இந்த முடிவை ரத்து செய்ய துறைசார் அமைச்சருக்கு அறிவுறுத்தல் வழங்குமாறு உங்களை கேட்டுக்கொள்கிறேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பியுள்ள அவசர கடிதத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கூறியுள்ளார். 

இந்த விவகாரம் தொடர்பில் தமது டுவீடர், முகநூல் தளங்களிலும் பதிவுகளை மேற்கொண்டுள்ள மனோ கணேஷன், ஜனாதிபதி கோட்டாபயவுக்கு அனுப்பியுள்ள தமது கடிதத்தில் மேலும் கூறியுள்ளாதாவது, மூன்று மொழிகளையும் பேசி, எழுதி, தேசிய மொழிகள் மூலம் தேசிய ஒருமைபாட்டை ஏற்படுத்துவதில் நம்பிக்கை கொண்ட கட்சி தலைவர் என்ற முறையிலும், 67 வருடங்களுக்கு பிறகு சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டதை உறுதி செய்ய பாடுபட்ட ஒருவன் என்ற முறையிலும், தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள் விவகாரங்களை கையாண்ட முன்னாள் அமைச்சர் என்ற முறையிலும் நான் இதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். 

இந்தியாவின் பெருமகன் ரபீந்திரநாத் தாகூர் அவர்களின் சீடனாக, கொல்கத்தா சாந்தி நிகேதனில் பயின்ற, நமது நாட்டு தேசிய கவிஞர் அமரகோன் அவ்வேளையில் எழுதி, இசையமைத்த, அன்றைய தேசிய பாடல்தான், பின்னாளில் நமது தேசிய கீதமாக அங்கீகாரம் பெற்றது என்பதை ஞாபகப்படுத்துகிறேன். இந்த தேசிய கீதத்தை நல்லதம்பி, வரிக்குவரி அப்படியே தமிழ் மொழியில் மொழி பெயர்த்துள்ளார். 

ஒரே அர்த்தத்தில், ஒரே இசை வடிவில், நமது தாய் நாட்டை, “நமோ நமோ மாதா” என சிங்களத்திலும், “நமோ நமோ தாயே” என தமிழிலும் பாடும் தேசிய கீதம் எமக்கு கிடைத்துள்ளது எமது அதிஷ்டமாகும் என நான் நினைக்கிறேன். இதை பிரதானமாக கொண்டு மொழி உரிமைகளை பயன்படுத்தி நாம் இந்நாட்டில் வாழும் இரண்டு மொழிகளை பேசும் இனத்தவர்களையும் இலங்கையர்களாக ஒன்று சேர்ப்போம் என் நான் உங்களுக்கு கோரிக்கை விடுக்க விரும்புகிறேன். 

அதிகார பகிர்வை வலியுறுத்தும் அரசியலமைப்பின் 13 ஆம் திருத்தம் தொடர்பாக உங்களுக்கு மாறுபட்ட கருத்து இருப்பதாக நீங்கள் கூறியுள்ளீர்கள். எனினும் மொழியுரிமை என்பது 13 ஆம் திருத்தம் மூலம் எமது அரசியலமைப்பில் உட்புகுத்தப்படவில்லை. 16 ஆம் திருத்தம் மூலமாக மொழியுரிமை ஏற்றுக்கொள்ளப்பட்டு, அரசியலமைப்பின் 4 ஆம் அத்தியாயத்தில், இலங்கையின் இணை ஆட்சி மொழிகளாகவும், தேசிய மொழிகளாகவும் சிங்களம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளும் அதேவேளை ஆங்கில மொழி இணைப்பு மொழியாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. 

“ஒரே நாடு, மூன்று மொழிகள்” என்ற அடிப்படையில் இந்த நாட்டை ஒன்று சேர்த்து, சிங்கள, தமிழ், முஸ்லிம் அடிப்படைவாத, பிரிவினைவாதிகளை தோற்கடிக்கும் அரிய சந்தர்ப்பத்தை தவறவிட வேண்டாம் என உங்களை வேண்டுகிறேன். 

உங்கள் அரசில் இருக்கின்ற சிலர், “ஒரே மொழி” என்ற கொள்கையை முன்னெடுக்க முயல்கின்றனர். இத்தகையை கொள்கைதான் 1956 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டு அடுத்து வந்த பல்லாண்டுகளாக இந்த நாட்டை படுகுழியில் தள்ளியது. உண்மையில் ஒரே மொழி என்று சொல்லும் போது ஒரே நாடு என்ற கொள்கைதான் பலவீனமாகிறது. 

இவர்கள், உலகில் எங்கேயும் இரண்டு மொழிகளில் தேசிய கீதம் கிடையாது என்று கூறுகின்றனர். இது பிழையான தகவல். உலகில் பல நாடுகளில் தேசிய கீதம், அவ்வந்த நாடுகளில் பேசப்படும் ஒன்றிற்கு மேற்பட்ட மொழிகளில் பாடப்படுகின்றன. சில நாடுகளில் ஒரே கீதத்தில் இரண்டு மொழி வரிகள் இடம்பெறுகின்றன. 

அதேவேளை 15 தேசிய மொழிகளை கொண்ட இந்தியாவின் தேசிய கீதம் இந்தி மொழியில் இருக்கின்றது என்றும் இதே சிலர் கூறுகின்றனர். இதுவும் பிழை. இந்தியாவின் தேசிய கீதம், இலங்கை தேசிய கீதத்தை எழுதிய அமரகோனின் குருவான ரபீந்திரநாத் தாகூரால் தமது தாய்மொழி வங்காளியில் எழுதப்பட்டது. வங்காள மொழி இந்தியாவின் சிறுபான்மையினரின் மொழியாகும். அதற்காக நாம் இலங்கையின் தேசிய கீதத்தை தமிழ் மொழியில் மாத்திரம் பாட வேண்டும் என நாம் கூறவில்லை. தமிழிலும் பாடுவோம் என்றுதான் கூறுகிறோம். 

சிங்கள, தமிழ் நாடுகளை தவிர்த்து, இலங்கை நாட்டை கட்டி எழுப்புங்கள். தமிழிலும் இலங்கை தேசிய கீதத்தை பாடுவது தேசாபிமான நடவடிக்கை ஆகும். சில போலி தேசிய வாதிகள், மொழி இனங்களை ஒன்று சேர்க்கும் இந்த தேசாபிமான நடவடிக்கையை நிறுத்தி விட முயல்கிறார்கள். அதற்கு இடம் கொடுக்க வேண்டாம் என உங்களை நான் கோருகிறேன் என அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

7 comments:

  1. ஒரு நாட்டினுள் இரண்டு அரசு,இரண்டு தேசியக் கீதம்,இரண்டு பாராளுமன்றம்....? அப்பா அப்படி எங்கேயாவது இருந்தால் சொல்லுங்களேன்.
    பிரிவினையாலேயே இவ் அழகிய நாட்டைச் சின்னாபின்பாப் படுத்தி விட்டார்கள்.
    பேராசை பெரும் தரித்திரம் என்று சும்மாவா சொன்னார்கள்.

    ReplyDelete
  2. துணிச்சலான கோரிக்கை. தேசிய கீதமானது இரு மொழிகளிலும் கலந்து அமையப்பெற்றிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். ஒவ்வொரு இலங்கைப் பிரசையும் இருமொழிக்கும் மதிப்பளித்திருப்பார்கள். மேலும், தாய் மொழியில் பாடும் போதே அர்த்தம் புரிந்து நாட்டின் மீது கெளரவம் ஏற்படும். தெரியாத மொழியில் பாடும் போது புரியாதவர்கள் கவனக்குறைவாக இருந்துவிட்டால் தேசிய கீதத்தை மதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு வந்து சேரும்.

    ReplyDelete
  3. 1949 ஆண்டு இலங்கை சட்டத்தில் இரு மொழிகளிலும் தேசிய கீதம் பாடப்படும் என குறிப்பிடப்பட்டிருக்கின்றது. முன்னாள் அமைச்சர் கூறுவதுபோல, இரு மொழிகளிலும் தேசிய கீதம் பாடுவது இந்த நாட்டின் பல்லின பன்மொழிக் கொள்கைக்கு உ ரமூட்டுவதாக அமைந்துள்ளது. எனவே அறப புத்தியுள்ள இனத்துவேசிகளின் கருத்தை விட்டு இந்த நாட்டில் வாழும் அனைவரும் இலங்கையர்கள் என்ற சிந்தனையின் அடிப்படையில் நாட்டின் செயல்திட்டங்களை அமைத்துக்ெ காள்வது இந்த நாட்டை முன்னேற்றிச் செல்ல உறுதுணையாக அமையும்.

    ReplyDelete
  4. Mr Ajan what about your opinion?

    ReplyDelete
  5. மதிப்புக்குரிய மனோ கணேசனுக்கு என் நன்றிகள். Mohamed Lafir அவர்களே. கிழக்குமாகாண ஆளுனர் உட்பட சிங்கள தலைவர்கள் ஒரே தேசியகீதம் ஒரே சட்டம் என்கிறார்கள். ஏற்றுக் கொள்வீர்களா? தமிழ் தமிழரது மட்டுமல்ல முஸ்லிம்களுக்கும் மலையக மக்களுக்கும்கூட மொழி அடையாளமாகும். கனடாவில் ஆங்கிலம் பிரஞ்சு மொழிகளில் கலந்து பாடுகிறார்கள். இலங்கையிலும் சிங்களம் தமிழ் வரிகளை மாறி மாறி கலந்து பாடுவதே ஏற்றுக்கொள்ளக்கூடியது.இந்திய தேசியகீதம் வங்க மொழியில் பாடப்படுகிறது. தமிழர்கள் தங்களுக்கான தேசிய கீதத்தை உருவாக்கட்டுக்கும் என்கிற அர்தத்தில் ஜனக பண்டார கூறியிருப்பார் போலும்.

    ReplyDelete
  6. ஜெயபாலன் ஐயா,எனது கருத்தை ஊன்றிக் கவனியுங்கள். ஒரு நாட்டில் ஒரு இடத்தில் பாடப்படுவது போன்றே மற்ற இடத்திலும் பாடப்பட வேண்டும். அது எத்தனை மொழிகள் கலந்திருந்தாலும் பரவாயில்லை.
    நாடு ஒன்று ஒரே தேசம் என்றால் தேசிய கீதமும் ஒன்றுதான். எதற்கெடுத்தாலும் பிரிவினை, வேறுபாடு என சமூகத்தைக் கூறுபோட்டே அரசியல் செய்வதே தமிழ் அரசியல்வாதிகளின் வாடிக்கையாகிவிட்டது.
    பாசிசப் புலி கருணாவைப் பாருங்கள்.தனது அரசியல் பிழைப்புக்காக எவ்வளவு கேவலமாக நடந்து கொள்கிறான்.
    ஐயா,இலங்கை தமிழ் அரசியலை அன்று முதல் இன்று வரை அலசிப் பாருங்கள்.பெரும் பூதங்கள் வெளிக்கிளம்பும்.துர்வாடை வீசும்.
    ஏனைய மக்களோடு இணங்கி,கலந்து,ஒன்றுபட்டு,கூட்டுறவாக அரசியல் செய்ய முடியாத கையறு நிலைக்கு தமிழ் சமூகத்தை நட்டாற்றில் விட்டுள்ளதன் பாவச் சுமையைத் தமிழ்த் தலைமைகள் ஏற்றுப் பின்வாங்கும் வரை சாபமே.

    ReplyDelete
  7. திரு Mohamed Lafir அவர்களுக்கு. தமிழருக்கும் பிரச்சினைகள் இருக்கு, ஆனால் நிச்சயமா இலங்கையிலோ இந்துசமுத்திரத்திலோ சர்வதேச அரங்கிலோ தமிழர் கையறு நிலையில் இல்லை என்பதை நான் உறுதியாக சொல்ல முடியும். தமிழ் முஸ்லிம் உறவை இன்னும் சீரடையவில்லை என்பது கவலை. தேசிய கீதம் சுதந்திரத்தில் இருந்தே தமிழிலும் பாடப்படுகிறது. இது எங்கள் உரிமை தொடர்பாக ஒரு முக்கிய சவால்தான். ஜநாதிபதி என்ன சொல்கிறார் என்பதை அறிய காத்திருக்கிறோம். தனிச்சட்டம் மற்றும் தொடரும் அச்சுறுத்தல் போன்ற விடயங்களில் முஸ்லிம்களை தமிழர் ஆதரிக்க வேண்டும் என்பதுதான் எனது நிலைபாடு. அதற்கான சூழலை நாம் உருவாக்க வேண்டும். இல்லையா தோழரே.

    ReplyDelete

Powered by Blogger.