Header Ads



"இது ஒவ்வொரு முஸ்லிமையும் பாதிக்கும், இது முஸ்லிம்களுக்கு எதிரானது"

ஞாயிற்றுக்கிழமையன்று குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட டெல்லியில் உள்ள ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் போலீஸாரால் தாக்கப்பட்டபோது எடுத்த காணொளிகள் பல சமூக வலைதளங்களில் வைரலாகின.

அதில் ஒன்று, மூன்று பெண்கள் மாணவர் ஒருவரை போலீஸாருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு காப்பாற்றுவது போன்ற காணொளி.

அந்த காணொளியில், மாணவர் ஒருவரை கேட்டிற்கு வெளியே அழைத்து வர போலீஸார் முயற்சி செய்வர். ஆனால் அதை நான்கு பெண்கள் சேர்ந்து தடுக்க முயற்சிப்பர்.

ஆனால் அந்த மாணவரை போலீஸார் திரும்ப திரும்ப வெளியே இழுத்து வர முயற்சித்து பின் வெளியே வந்தவுடன் அடிக்க தொடங்குவர். அவரை நான்கு பெண்களும் சூழ்ந்து போலீஸாருடன் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டு போலீஸார் அந்த மாணவரை அடிக்கவிடாமல் தடுப்பார்கள்.

அது ஒரு பதற்றமான சூழல் என்றாலும் அந்த பெண்கள் அனைவரும் அச்சமின்றியே காணப்பட்டனர். அதில் லதீதா ஃபர்சானாவிடம் என்பவரிடம் பிபிசி இந்தி சேவையின் தில்னவாஸ் பாஷா பேசினார்.

"நாங்கள் எங்கள் நண்பரை காப்பாற்ற முயற்சி செய்தோம் அவ்வளவுதான்," என்கிறார் லதீதா.

அந்த காணொளியின் கால அளவு ஒரு நிமிடத்துக்கும் குறைவாகவே இருந்தாலும், நாடு முழுவதும் போராட்டம் குறித்தும், சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நடைபெறும் போராட்டத்திற்கு எதிரான போலீஸாரின் வன்முறை குறித்தும் பேசப்பட்டது.

இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து முஸ்லிம் அல்லாதவர்கள் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளானவர்களுக்கு குடியுரிமை வழங்கும் குடியுரிமை திருத்த சட்டம் நிறைவேறியதிலிருந்து, நாடு முழுவது அதற்கு எதிராக பல போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இது முஸ்லிம் மக்களுக்கு எதிரானது என்றும், இதனால் பெரியளவில் குடியேற்றம் நடைபெறக்கூடும் எனவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்துக்கு அருகில் நடைபெற்ற போராட்டத்தில் நடைபெற்ற வன்முறையில் மாணவர்கள், போலீஸார் என குறைந்தது 50 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

டெல்லியில் நடைபெற்ற ஜாமியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் லதீதா மற்றும் அவரின் நண்பர்களும் அடங்குவர்.

அந்த சமயத்தில்தான் ஷஹீன் அப்துல்லா ஒரு வீட்டிலிருந்து வலுக்கட்டாயமாக இழுத்து வரப்பட்டார்.

காயத்தைச் சுற்றிலும் போடப்பட்டிருந்த கட்டுகள் அவற்றின் முகத்தை மூடியிருந்தது. இருப்பினும் தொடர்ந்து போராடப்போவதாக அவர் திங்களன்று தெரிவித்தார்.

"இது எங்களை பற்றியது இல்லை. இது வரக்கூடிய மசோதா குறித்தது," என அவர் தெரிவித்தார்.

"இது என்னை மட்டுமோ அல்லது அந்த பெண்களை மட்டுமோ பாதிக்கப்போவது இல்லை. இது நாட்டில் உள்ள ஒவ்வொரு முஸ்லிமையும் பாதிக்கும்,"

"விழிப்புணர்வுடன் இருங்கள், வெளியே வாருங்கள், ஒற்றுமையாக இருந்து இதற்கு எதிராக போராடுங்கள். அது நமது கடமை," என்கிறார் 22 வயது லதீதா.

'உங்கள் குரலை உயர்த்துங்கள்'

இந்த வார தொடக்கத்தில் ஐநாவின் மனித உரிமை அலுவலகம் இந்த சட்டம் குறித்து கவலை தெரிவித்திருந்தது. அது பாகுபாடு நிறைந்த ஒன்று என்றும் தெரிவித்திருந்தது.

ஆனால் இந்து தேசியவாத கொள்கை கொண்ட பாஜக அரசு இதில் மதபாகுபாடு இல்லை என்றும், இந்த சட்டத்தின் நோக்கம் மத ரீதியால் துன்புறுத்தலுக்கு ஆளானவர்களுக்கு குடியுரிமை வழங்குவதே என்றும் தெரிவிக்கிறது.

லதீதா மற்றும் அவரின் நண்பர்கள், இந்த சட்டத்தின் நோக்கம் அனைவருக்கும் தெரிந்தது என்கின்றனர். "இது முஸ்லிம்களுக்கு எதிரானது என்று அனைவருக்கும் தெரியும்."

அதனால் இந்த போராட்டத்தில் முஸ்லிம் அல்லாத மாணவர்களும் கலந்து கொண்டனர். இது இந்தியாவின் மதச்சார்பற்றத்தன்மையை பாதிக்கும் என்று அவர்களுக்கு தெரியும்.

ஆனால் அந்த சமயத்தில்தான் போலீஸார் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்து கதவை உடைத்து, நூலகத்தின் உள்ளே கண்ணீர் புகை குண்டுகளை எரிந்தனர்.

இந்நிலையில், போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவரும் பணியில் குறைந்தபட்ச எண்ணிக்கையிலான காவல்துறையினரே பயன்படுத்தப்பட்டகாகவும், அச்சமயத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுவதில் எவ்வித உண்மையும் இல்லை என்றும் டெல்லி காவல்துறையின் செய்தித்தொடர்பாளர் ராந்தவா செய்தியாளர்களிடம் கூறினார்.

ஆனால் போலீஸாரின் இந்த வார்த்தைகள் மாணவர்களின் கோபத்தை குறைக்கவில்லை.

அந்த நான்கு பெண்களில் ஒருவரான் ஆயீஷா ரென்னா, தங்களை போல அடுத்த பிற பெண்களும் போராட்டத்துக்கு வர வேண்டும் என்று தெரிவிக்கிறார்.

"வெளியே வாருங்கள், சில ஆண்கள் உங்களை வீட்டில் அமரச் செய்வார்கள் ஆனால் நீங்கள் உங்கள் குரலை உயர்த்த விரும்பும் சமயத்தில் குரல் எழுப்புங்கள் அது உங்கள் உரிமை,"என்கிறார் ஆயீஷா.

No comments

Powered by Blogger.