Header Ads



ஜமால் கஷோக்ஜி கொலை - சவுதியில் 5 பேருக்கு மரண தண்டனை

கடந்த ஆண்டில் சௌதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால் கஷோக்ஜி கொலை செய்யப்பட்டது தொடர்பாக 5 பேருக்கு சௌதி அரேபிய நீதிமன்றம் ஒன்று மரண தண்டனை வழங்கியுள்ளதாக அந்நாட்டின் அரசு வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்துள்ளார். 

பிரபல பத்திரிகையாளரான கஷோக்ஜி சௌதி அரசு மீது விமர்சனங்களை வைத்து வந்தார். 

கடந்த ஆண்டு (2018) அக்டோபர் 2 ஆம் திகதி துருக்கி நாட்டின் இஸ்தான்புல்லில் உள்ள சௌதி தூதரகத்தில் நுழைந்த பின்னர் அவர் உயிருடன் வெளியே வரவில்லை. 

சௌதிக்கு கஷோக்ஜியை திருப்பி வர வைப்பதற்காக அனுப்பப்பட்ட ஊழியர்கள் மேற்கொண்ட ஒரு முரட்டுத்தனமான நடவடிக்கையில் கஷோக்ஜி கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. 

ஜமால் கஷோக்ஜி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சௌதி தலைநகரான ரியாத்தில் 11 பேர் மீது வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. 

1980 - 90 ஆகிய காலகட்டங்களில் பல முறை ஜமால் கஷோக்ஜி, ஒசாமாவை நேர்காணல் கண்டிருக்கிறார். 

ஒரு காலத்தில் ஜிகாதிகளின் சர்வதேச தலைவராக இருந்த அப்துல்லா அஜ்ஜாமை காப்பாற்றியவர் ஜமால் கஷோக்ஜி. ஒசாமா பின் லேடனின் நெருங்கிய நண்பராக இருந்தவர் ஜமால் கஷோக்ஜி என்றும் கடந்தாண்டு பேசப்பட்டது. 

கட்டார் அரசின் ஆதரவில் இயங்கும் ´அல் ஜசீரா´வுக்கு எதிராக செளதி ஆதரவில் அல் அரப் தொலைக்காட்சி 2012 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டபோது அதன் தலைமை பொறுப்பை இவர் ஏற்றார். 

ஆனால், 2015 ஆம் ஆண்டு பஹ்ரைனில் ஒளிபரப்பை தொடங்கிய 24 மணி நேரத்திலேயே தன் ஒளிபரப்பை நிறுத்தியது அந்த தொலைக்காட்சி. அதற்கு பஹ்ரைனின் எதிர்க்கட்சி தலைவரை பேச அழைத்ததுதான் காரணம். 

செளதியின் விவகாரங்கள் குறித்து காத்திரமாக எழுதும் ஊடகவியலாளராக பார்க்கப்பட்டார் ஜமால். 

துருக்கியை சேர்ந்த ஹெடிஸ் செஞ்சிஸ் என்ற பெண்ணை திருமணம் செய்ய ஜமால் கஷோக்ஜி திட்டமிட்டிருந்தார். அதற்கு கஷோக்ஜியின் முதல் திருமணத்தின் மணமுறிவு சான்றிதழ் அவசியம். 

இதனை பெறவே இஸ்தான்புலில் உள்ள செளதி அரேபியா தூதரகத்திற்கு சென்றார் ஜமால்.

முதலில் செப்டம்பர் 28 ஆம் திகதி சென்ற அவரை அக்டோபர் 2 ஆம் திகதி வந்து சான்றிதழை பெற்றுகொள்ள வலியுறுத்தினர் அதிகாரிகள். 

அக்டோபர் 2 ஆம் திகதி சென்ற அவர் அதன்பின் மீண்டும் வீடு திரும்பவே இல்லை.

1 comment:

  1. கடந்த ஆண்டு (2018) அக்டோபர் 2 ஆம் திகதி துருக்கி நாட்டின் இஸ்தான்புல்லில் உள்ள சௌதி தூதரகத்தில் நுழைந்த பின்னர் அவர் உயிருடன் வெளியே வரவில்லை. தூதரகம் யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது , சவுதிஅரசின் "? இது அரசியல் நாடகம் ,வடிவமைத்தவர் மன்னர் என்கின்ற பேச்சும் சர்வதேச அளவில் பேசப்பட்டது . மன்னர் என்பதால் சட்டம் வளைந்து கொடுத்ததோ . ஷரியா சட்டம் வளைந்து கொடுக்குமோ அல்லாஹ் போதுமானவன்

    ReplyDelete

Powered by Blogger.