அடுத்த வருடம் இலங்கை 4.8 மில்லியன் டொலர் கடனை மீளச்செலுத்த வேண்டும்
நாடு பாரிய நெருக்கடிக்குள் உள்ளது. ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி கடந்த காலங்களில் 3 வீதத்திற்கும் குறைந்த தன்மையையே காட்டுகின்றது. எவ்வாறு இருப்பினும் 2020 ஆம் ஆண்டில் ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி 4 தொடக் கம் 4.5 வீதமாக வளர்ச்சி காணும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஜனவரி மாதத்தில் ஜனாதிபதியினால் அரசாங்க கொள்கை அறிக்கையொன்று வெளியிடப்படவுள்ள காரணத்தினால் 6 வீத வளர்ச்சி அல்லது 6.5 வீத வளர்ச்சியை நோக்கி பயணிக்க முடியும் என அரசாங்கம் கூறுவதாகவும் அது எந்தளவு சாத்தியம் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும் எனவும் மத்திய வங்கி ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ.டி லக்ஸ்மன் தெரிவித்தார்.
2020 ஆம் ஆண்டுக்கான சர்வதேச கடனாக 4.8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் கூறினார்.
நிதியியல் கொள்கை மீளாய்வு நிலைப்பாடு குறித்து நேற்று மத்திய வங்கியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஆளுநர், பிரதி ஆளுநர், சிரேஷ்ட பிரதி ஆளுநர் உள்ளிட்ட அதிகாரிகள் குழு கலந்துகொண்ட நிலையில் இந்த சந்திப்பில் கருத்துக்களை கூறிய ஆளுநர் ,
ஜனாதிபதி மற்றும் பிரதமர் அனுமதியுடன் ஜனாதிபதி செயலாளர் மூலமாக பெயர் குறிப்பிடப்பட்டு என்னை மத்திய வங்கி ஆளுநராக நியமித்துள்ளனர். மிகப்பெரிய பொறுப்பொன்றை என்னிடம் கொடுத்துள்ளனர். ஆனால் நான் மத்திய வங்கி விவகாரங்களுடன் தொடர்புபட்ட கற்கையில் செயற்படும் காரணத்தினால் இது எனக்கு பரீட்சயமான ஒன்றாகவே கருதுகின்றேன். எனவே இத்தனை காலமாக கற்றவற்றை இப்போது என்னால் பரீட்சார்த்து பார்க்க முடியும். எனினும் முதல் தடவையாக நான் இவற்றை செயற்படுத்த நியமிக்கப்பட்டுள்ளேன். எனவே என்னுடன் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கி செயற்படுவீர்கள் என நம்புகிறேன்.
அத்துடன் நாம் பிரதானமான சில விடயங்கள் குறித்து கவனம் செலுத்துகின்றோம். இதில் நிலைபேறான உள்நாட்டு நிதிக் கண்காணிப்பு மதிப்பு, இலங்கையின் ரூபாவின் நிலையான தன்மையை பேணல், உற்பத்தி குறித்த கவனம் மற்றும் நிதி வருகை, வேலைவாய்ப்பு, சர்வதேச வங்கிகளுடன் நாம் கையாளும் முறைமை மற்றும் சர்வதேச சந்தையில் எமது தன்மையை தக்கவைத்தல் என்ற விடயங்கள் கருத்தில் கொள்ளப்படும்.
இலங்கையின் பொருளாதார நிலைமையானது 2019 ஆம் ஆண்டு மூன்றாம் காலாண்டில் 2.7சதவீத மந்தமான வளர்ச்சியையே பதிவு செய்துள்ளது. இதற்கு வேளாண்மை மற்றும் சில அசாதாரண நிலைமைகள் காரணமாக அமைந்துள்ளன.
பண வீக்கம் தாழ்ந்த மட்டத்தில் காணப்படுகின்றது. வரி நீக்கம் மற்றும் பொருளாதார நிலைமைகள் இதற்கு காரணமாக அமைந்துள்ளன. நடுத்தர காலகட்டத்தில் இது வளர்ச்சி காணும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேபோல் அதிகரித்த இறக்குமதி வீழ்ச்சி மற்றும் பற்றாக்குறையான ஏற்றுமதி காரணமாக இந்த ஆண்டில் முதல் 10 மாதங்களில் வர்த்தக பற்றாக்குறை 2.4 பில்லியன் அமெரிக்க டொலர்களினால் குறைவடைந்துள்ளது. சுற்றுலாத்துறையை பொறுத்தவரை உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் படிப்படியான வளர்ச்சி நிலைமை காணப்படுகின்றது. ஆண்டில் 11 மாத அடிப்படையில் சுற்றுலாத்துறையினரின் வருகையானது 19.6 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.
இன்று நாடு பாரிய நெருக்கடியில் உள்ளது. 5 வீதத்துக்கும் குறைவான ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சியே காணப்படுகின்றது. கடந்த காலங்களில் இது 3 வீதத்திற்கும் குறைந்த தன்மையையே காட்டுகின்றது. ஆகவே இதில் கவனம் செலுத்தப்பட வேண்டும். வேலைவாய்ப்பு இன்மை, வாழ்க்கை செலவு, குறைந்த அளவிலான தொழிலாளர் சக்தி பயன்பாடு, கற்ற இளைஞர்கள் வேளைகளில் ஈடுபடாத உயரிய நிலைமைகள், குறைந்த உற்பத்தி என்ற விடயங்களை அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும். இதில் மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலமே வறுமையை குறைக்க முடியும். அத்துடன் வெளிநாட்டு முதலீடுகள் சர்வதேச நிதி விடயங்களில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும். வியாபார முதலீடுகளுக்கு அதிக கவனம் செலுத்த வேண்டும்.
எவ்வாறு இருப்பினும் 2020 ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 4 தொடக்கம் 4.5 வீதமாக வளர்ச்சி காணும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஜனவரி மாதத்தில் ஜனாதிபதியினால் அரசாங்க கொள்கை அறிக்கையொன்று வெளியிடப்படவுள்ள காரணத்தினால் இதில் பொருளாதார கொள்கை கட்டமைப்பு மற்றும் நடுத்தர காலத்தின் கொள்கை போக்கு தொடர்பிலான மேலதிக தெளிவொன்று கிடைக்கும் என மத்திய வங்கி எதிர்பார்க்கின்றது.
அத்துடன் தற்போதுள்ள வரி கொள்கையும் பொருளாதார தன்மையில் மாற்றங்களை ஏற்படுத்தும் என நம்ப முடியும். இது நடுத்தர மட்டத்தில் 4 தொடக்கம் 4.5 வீத பொருளாதார வளர்ச்சியை பெறும் வகையிலும் பொருளாதார வளர்ச்சியை அதன் உத்வேக மட்டத்தில் பேணவும் முடியும் என நம்பலாம். அவ்வாறு பார்க்கையில் அரசாங்கம் கூறுவதற்கு அமைய 6 வீத வளர்ச்சி அல்லது 6.5 வீத வளர்ச்சி என கூறப்படுகின்றது. அது எந்தளவு சாத்தியம் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும் என்றார்.
YOU HAVE ACCEPTED THIS POSITION AT YOUR OLD AGE.THEY HAVE APPOINTED YOU TO MAKE USE OF YOU TO COMPLETE THEIR HIDDEN AGENDA.PLEASE REMEMBER THEY ALWAYS USE THEIR CONDOM POLICY TO PUT THE BLAME ON THE OFFICER CONCERN.GOOD LUCK TO YOU.
ReplyDelete