Header Ads



அண்ணன் செலுத்திய உழவு இயந்திரத்தில் இருந்து தவறிவிழுந்த 2 சகோதரர்களில் ஒருவர் பலி

-ஏ.எச்.ஏ. ஹுஸைன் -

அண்ணன் அதிவேகமாகச் செலுத்திய உழவு இயந்திர இழுவைப் பெட்டியிலிருந்து தவறி விழுந்த  இரு சகோதரர்களில் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியான சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

செவ்வாய்க்கிழமை இரவு 8.40 மணியளவில் இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில் மைலம்பாவெளி கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ்கரலிங்கம் சஞ்ஜை (வயது 16) சிறுவன் பலியாகியுள்ளான்.

பொலிஸ் விசாரணைகளிலிருந்து சம்பவம்பற்றி மேலும் தெரியவருவதாவது, சகோதரர்களான சுரேஷ்கரலிங்கம் நிதர்ஷன் (வயது 18) என்பவர் உழவு இயத்திரத்தை அதன் இழுவைப் பெட்டியுடன் செலுத்திச் செல்ல மற்றைய தம்பிகளான சுரேஷ்கரலிங்கம்   சஞ்ஜை (வயது 16) சுரேஷ்கரலிங்கம் வினித் (வயது 17) ஆகிய இருவரும் உழவு இயந்திரப் பெட்டியில் ஏறி அமர்ந்து கொண்டு சென்றுள்ளனர்.

இவ்விதம் இந்த உழவு இயந்திரம் ஏறாவூரிலிருந்து கித்துள் நோக்கி வேகமாகச் செலுத்திச் செல்லப்படும்போது பதுளை வீதி – பங்குடாவெளி எனுமிடத்தில் வைத்து உழவு இயந்திரப் பெட்டியில் அமர்ந்திருந்து பயணம் செய்த சகோதரர்கள் இருவரும் திடீரென வீதியில் கீழே விழுந்துள்ளனர்.

படுகாயமடைந்த இரு சகோதரர்களில் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார். மற்றையவரான சுரேஷ்கரலிங்கம் வினித் (வயது 17) படுகாயங்களுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் உழவு இயந்திரத்தை செலுத்திச் சென்றவரும் பலியான சிறுவனின் சகோதரருமான சுரேஷ்கரலிங்கம் நிதர்ஷன் (வயது 18) என்பவரைக் கைது செய்துள்ளனர். மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன.

No comments

Powered by Blogger.