நல்லாட்சியில்தான் அதிக நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது - மஹிந்த
எனது ஆட்சி தேசிய நிதி மோசடிக்கு துணைபோனதாக விமர்சிக்கும் நான்கரை வருட நல்லாட்சியில்தான் அதிகளவாக தேசிய நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது. இக்காலப்பகுதியில் பயனற்ற விதமாக பெற்றுக் கொண்டுள்ள 6 ரில்லியன் அரச முறை கடன்களை மீள் செலுத்த வேண்டிய பொறுப்பு தற்போது எமக்கு காணப்படுகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
பாணந்துறை நகரில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மக்களுக்கு சேவையாற்றாத அரச நிர்வாகத்தினையே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச ஆகியோர் முன்னெடுத்தார்கள். கடந்த அரசாங்கத்தினையும் எனது குடும்ப உறுப்பினர்களையும் பழிவாங்கவே அதிக கவனம் செலுத்தப்பட்டமையினாலேயே நாட்டுக்கு எவ்வித சேவையினையும் முன்னெடுக்கவில்லை.
நல்லாட்சி அரசாங்கத்தின் பெறுபேறு மத்திய வங்கி பிணைமுறி கொடுக்கல் வாங்கலின் ஊடாக வெளிப்பட்டு விட்டது. கடந்த அரசாங்கத்தினை திருடன் என்று விமர்சித்து தேசிய நிதியினை அரசாங்கம் கொள்ளையடித்துள்ளது. இதன் விளைவினை நாட்டு மக்கள் இன்று எதிர்கொள்கின்றார்கள்.
எமது ஆட்சியில் அரச முறை கடன்கள் பெற்றுக் கொள்ளப்பட்டன. இதனை மறுக்கவில்லை. 30வருட கால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரவும், யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதை தொடர்ந்து அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கவும் 5 ரில்லியன் நிதி மாத்திரமே கடனாக பெற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால் நான்கரை வருட கால நிர்வாகத்தில் அரசாங்கம் 6 ரில்லியன் அரச முறை கடன்களை பெற்றுள்ளது. ஆனால் எவ்வித அபிவிருத்திகளும் முன்னெடுக்கப்படவில்லை. மக்களின் வாழ்க்கைத் தரமும் முன்னேற்றமடையவில்லை.
இவ்வாறு பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்களை நாங்களே மீள செலுத்தவேண்டியுள்ளது. மக்களின் வாழ்க்கை செலவுகள் அதிகரிக்கும் போது ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச எவ்விதமான கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை. ஆனால் தற்போது தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் போலியான வாக்குறுதிகளை வழங்கி, மக்களை ஏமாற்றுகின்றார். இம்முறையும் நாட்டு மக்கள் ஏமாறமாட்டார்கள் என்பதை பிரதமர் ரணிலும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவும் புரிந்து கொள்ள வேண்டும்.
பொருளாதார ரீதியில் பின்னடைந்துள்ள மக்களுக்கு நிச்சயம் எமது நிர்வாகத்தின் முதல் காலாண்டில் நிவாரணம் வழங்கப்படும். தேசிய பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு சாதாரண மக்களை ஒருபோதும் நெருக்கடிக்குள் தள்ள மாட்டோம் என்றார்.
எல்லா ஆட்சியிலும் நிதி மோசடிதான். அதற்குத்தான் வாறீங்களே.
ReplyDeleteஅடுத்தது உங்கட ஆட்சிலேயும் நிதி மோசடி என்று ஒத்துக்கொண்டேல். தேங்க்ஸ்.