கிழக்கு மாகாணத்தில் தேர்தல், நிலவரம் எப்படியிருக்கிறது..?
ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு நடவடிக்கைகள் கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் மற்றும் தமிழர் பிரதேசங்களில் மிகவும் அமைதியாக நடைபெற்று வருகிறது.
மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பதை பல இடங்களில் அவதானிக்க முடிகிறது.
கிழக்கு மாகாணம் - அம்பாறை மாவட்டத்தில் காலை வேளையில் சிறிதளவு மழை பெய்த போதும், மக்கள் தொடர்ந்து வாக்களித்த வண்ணம் இருந்தனர்.
காலை 10.00 மணிக்கு முன்னதாகவே பல இடங்களில் கணிசமான அளவு மக்கள் வாக்களித்திருந்தனர். குறிப்பாக பெண்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலுள்ள முஸ்லிம் மற்றும் தமிழர் பகுதிகளில் அமைந்துள்ள கணிசமான வாக்களிப்பு நிலையங்களில், பிரதான ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் சார்பான வாக்களிப்பு நிலைய முகவர்கள் மட்டுமே கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
சில இடங்களில் மற்றொரு பிரதான வேட்பாளர் சார்பில் கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வாக்களிப்பு நிலைய முகவர்கள் சிலர், எதிரணியைச் சேர்ந்த பிரதான வேட்பாளரின் ஆதரவாளர்களால் அச்சுறுத்தப்பட்டதாகவும், அதன் காரணமாக, குறித்த முகவர்கள் - கடமையாற்றிய வாக்களிப்பு நிலையத்திலிருந்து வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.
இவ்வாறான முறைப்பாடுகள் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் அமைந்துள்ள பிரதேச தேர்தல் முறைப்பாட்டு நிலையத்தில் பதிவாகியுள்ளன. BBC
Post a Comment