தமிழ் - முஸ்லிம் வாக்குளை சிதறடிக்கும் முயற்சியில் பலர் ஈடுபட்டுள்ளார்கள் - சிவமோகன் Mp
தமிழ்- முஸ்லிம் வாக்குளை சிதறடிக்கும் முயற்சியில் பலர் ஈடுபட்டுள்ளார்கள் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இன்று -18- இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதித் தேர்தல் சூடு பிடித்திருக்கின்றது. ஒரு பகுதி சிங்கள மக்கள் இனவாத ரீதியாக ஒரே கொள்கையில் இருப்பதாக தெரிகிறது. சிங்கள வாக்குகளைப் பொறுத்தவரையில் சமமாகவோ அல்லது அதிகமாகவோ கோத்தபாயவுக்கு வரக் கூடிய சந்தர்ப்பங்கள் இருப்பதாகவே கூறுகிறார்கள்.
எனவே தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகள் தான் வெற்றியை தீர்மானிக்கப் போகிறன. தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குளை சிதறடிக்கும் முயற்சியில் பலர் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்த சிதறடிப்புக்கள் தமிழ் மக்களை மீண்டும் ஒரு அடிமை சாசனத்தின் கீழ் கொண்டு போய் விடப்போகிறது. எனவே தமிழ் மக்கள் மிகவும் வலுவாக ஆராய்ந்து தீர்மானம் எடுக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள்.
எவர் வென்றாலும் தமிழ் மக்களுக்கு கொள்கை ரீதியான தீர்வு கிடைக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. இருந்தாலும் தற்போது இருக்கின்ற சுதந்திரமான, ஜனநாயகமான வாழ்வுரிமையையும் இழந்து விட்டு நடு வீதியில் நிற்க முடியாது.
இதனால் காத்திரமான முடிவுகள் எடுக்க வேண்டியவர்களாகவுள்ளோம். தமிழ் மக்கள் மட்டுமன்றி சிங்கள மக்கள் கூட கடந்த ஆட்சியில் அடக்கப்பட்டார்கள். தண்ணீர் கேட்டு போராடியவர்களைக் கூட தாக்கியிருந்தார்கள். இவற்றையெல்லாம் சிங்கள மக்கள் மறந்து போனால் அவர்களும் அடக்குமுறைக்குள் தான் தள்ளப்படுவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment