சிறுபான்மையினர் வாக்களிக்காவிட்டாலும் கோத்தபாய, அமோக வெற்றிபெறுவது நிச்சயம் - விமலவீர Mp
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மையின மக்கள் கோத்தபாய ராஜபக் ஷவுக்கு வாக்களித்தாலும் வாக்களிக்காவிட்டாலும் அவர் அமோக வெற்றி பெறுவது நிச்சயம்.
அவர்தான் எமது அடுத்த ஜனாதிபதி என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. இன்னும் சில நாட்களில் எமது ஆட்சி மலரும். எனவே அன்னாரது வெற்றியின் பங்காளர்களாக சிறுபான்மைச் சமூகம் மாற வேண்டும் என அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க அறை கூவல் விடுத்தார்.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக பொதுஜன பெரமுன கட்சி ஆதரவாளர்களுடனான விசேட கலந்துரையாடல் அட்டாளைச்சேனை றகுமானியாபாத் மற்றும் காரைதீவு பிரதேசங்களில் நேற்றுமுன்தினம்(14) இடம்பெற்றது. இந்நிகழ்வுகளில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
சர்வதேசத்துக்கே சவாலாக இருந்த யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து நாட்டில் நிலையான சமாதானத்தை தோற்றுவித்து பாரிய அபிவிருத்திகளையும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ இந்நாட்டில் மேற்கொண்டு வரலாறு படைத்தார்.
அதே வழியில் நின்று செயற்படுவதற்கான சிறந்த ஜனாதிபதி வேட்பாளரை எமது பொதுஜன பெரமுன கட்சி களத்தில் இறக்கியிருக்கின்றது. அவருக்கு நாட்டில் உள்ள அனைத்து இன மக்களும் இணைந்து வாக்களிப்பதே எமது எதிர்கால நல்வாழ்வுக்கான அத்திவாரமாக அமையும்.
நல்லாட்சி அரசாங்கம் நாட்டில் ஆட்சி புரிந்த கடந்த நான்கரை ஆண்டுகளில் சிறுபான்மைச் சமூகத்துக்கு என்ன நன்மைகள் கிட்டியுள்ளன என்பதை நன்கு சிந்தித்துப் பார்க்க வேண்டும். குறிப்பாக முஸ்லிம் தலைமைகள் இந்நாட்டில் உள்ள முஸ்லிம் மக்களுக்கு கடந்த நான்கரை வருடங்கள் பெற்றுக் கொடுத்தது என்ன என்பதை நான் பகிரங்கமாக கேட்க விரும்புகின்றேன்.
வட –கிழக்கு மாகாணங்களில் உள்ள சிறுபான்மைச் சமூகத்தினர் கடந்த 2005 மற்றும் 2010 ஆகிய ஆண்டுகளில் மிகக் குறைந்தளவு வாக்குகளையே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு வழங்கினார்கள். இருந்த போதிலும் அவர் அமோக வெற்றி பெற்றார். அவ்வாறு வெற்றி பெற்றவர் சிறுபான்மைச் சமூகத்தினரை வெறுத்து ஒதுக்கவில்லை. நாட்டில் இன மத பேதமின்றி பாரிய அபிவிருத்தி புரட்சியை ஏற்படுத்தினார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது கோத்தபாய ராஜபக் ஷ சிறுபான்மையினம் வாக்களித்தாலும் வாக்களிக்காவிட்டாலும் அமோக வெற்றி பெறுவது நிச்சயம். எனவே அவரது வெற்றியின் பங்காளர்களாக சிறுபான்மைச் சமூகம் மாற வேண்டும் என்றார்.
Post a Comment