ஜனாதிபதியாக சஜித் தெரிவானால், இதனைச் செய்வாரா - அநுரகுமார பகிரங்க சவால்
தான் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டால் அரசியல் நியமனங்களை வழங்குவதில்லை என்று முடிந்தால் வாக்குறுதி அளிக்குமாறு தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திஸாநாயக்க, ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு சவால் விடுத்துள்ளார்.
மொனராகலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இவ்வாறு சவால் விடுத்துள்ளார்.
2015 ஜனவரி 8 ஆம் திகதி ஆட்சி மாற்றத்தில், திருடர்களைப் பிடிப்பதையே மக்கள் எதிர்பார்த்ததாக அவர் கூறினார்.
குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரையில் மக்கள் காத்திருந்ததாகவும், எனினும் முறையான முறைப்பாடுகள் கிடைக்கவில்லை எனவும் அவர் கூறினார்.
இதுபோன்ற முறைப்பாடுகளை FCID , CID அல்லது இலஞ்ச ஆணைக்குழுவில் தாக்கல் செய்யலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.
முறைப்பாடு இல்லாமல் விசாரணை செய்ய முடியாது என தெரிவித்த அவர், வீடமைப்பு அமைச்சில் ஏதாவது ஊழல் மோசடிகள் இடம்பெற்றிருந்தால் அதன் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு எதிராக சஜித் பிரேமதாசவிற்கு முறைப்பாடு செய்ய முடியும் என தெரிவித்தார்.
அவரிடம் முன்னாள் அமைச்சரின் ஆவணங்கள் அனைத்தும் உள்ளதாக தெரிவித்த அனுர, எனினும் ஐக்கிய தேசிய கட்சியின் எவரும் முறைப்பாடுகளை முன்வைக்க வில்லை என தெரிவித்தார்.
எனினும், தமது கட்சியின் வசந்த சமரசிங்க உள்ளிட்ட உறுப்பினர்கள் 130 முறைப்பாடுகளை இலஞ்ச ஆணைக்குழுவில் மற்றும் FCID யில் தாக்கல் செய்துள்ளதாக அனுர குமார திஸாநாயக்க தெரிவித்திருந்தார்.
சஜித் பிரேமதாசவால் சிறிய வீதிகளில் பல வீடுகள் கட்டுப்பட்டுள்ளதாகவும், பயன்படுத்தப்படாத பயிர்நிலங்களில் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அதன் காரணமாக நில பயன்பாட்டுக் கொள்கை ஒன்றை தயாரிக்க வேண்டும் என குறிப்பிட்ட அவர், முடிந்தால் மேடைகளில் அரசியலுக்காக மண்வெட்டிகள் அல்லது வேறு எதனையும் பெற்றுக் கொடுக்க மாட்டேன் என தெரிவிக்குமாறு சஜித் பிரேமதாசவிற்கு இதன்போது சவால் விடுத்தார்.
Post a Comment