முஸ்லிம்களின் அமோக ஆதரவினால், சஜித் வெற்றிபெறுவார்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்களின் அமோக ஆதரவினால் ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ வெற்றியீட்டுவார். முஸ்லிம்கள் இம்முறை தூர நோக்குச் சிந்தனையுடன் செயற்படுவார்கள். இதில் கடுகளவேனும் சந்தேகமில்லை
என, ஐக்கிய தேசியக் கட்சி மினுவாங்கொடை தொகுதி அமைப்பாளரும் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எட்வர்ட் குணசேகர தெரிவித்தார்.
கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின்போது நாம் கம்பஹா மாவட்டத்தில் தோல்வியடைந்தாலும், இம்முறை அமோக வெற்றியீட்டுவோம் என்றும் அவர் சூளுரைத்தார்.
ஐ.தே.க. மினுவாங்கொடை அலுவலகத்தில் நடைபெற்ற முஸ்லிம் பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தார். தொடர்ந்தும் அங்குஅவர் கருத்துத் தெரிவிக்கும்போது,
கடந்த காலங்களில் முஸ்லிம்கள் பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி இருந்தார்கள். அதேபோன்று இம்முறையும் விலகியிருப்பார்கள். முஸ்லிம்கள், பொதுஜன பெரமுனவின் உண்மை சுயரூபத்தை அறிந்து தெரிந்து வைத்துள்ளார்கள். முஸ்லிம்கள் ஒருபோதும் பெரமுனவுக்கு ஏமாறப் போவதில்லை.
சஜித் பிரேமதாஸ சிங்கள, தமிழ், முஸ்லிம் சகல மக்களினதும் ஆதரவுடன் பெரு வெற்றி பெறுவார். அவரது வெற்றியில் முஸ்லிம்களும் பங்காளர்களாக அவசியம் இருக்க வேண்டும். குறிப்பாக, மினுவாங்கொடை தொகுதி வாழ் முஸ்லிம்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அக்கறையுடன் வாக்களிக்க முன்வர வேண்டும்.
எதிர்கால சஜித் பிரேமதாஸ ஆட்சியில் முஸ்லிம்கள் சுதந்திரமாக அச்சமின்றி வாழும் சூழல் உருவாகும். நவம்பர் 16 ஆம் திகதி சஜித் வெல்வது உறுதி என்றார்.
( ஐ. ஏ. காதிர் கான் )
Post a Comment